நீட் தேர்வு ரத்து, கடலூரில் எய்ம்ஸ்... அசத்தல் திட்டங்களுடன் பாமகவின் நிழல் நிதி அறிக்கை வெளியீடு
பாமக சார்பில் நிழல் நிதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.
சென்னை: நீட் தேர்வு ரத்து, கடலூரில் எய்ம்ஸ் அமைப்பது, 3 ஆண்டுகளுக்கு பஸ் கட்டணம் உயராது உள்ளிட்ட மக்களை கவரும் திட்டங்களுடன் பாமக 16-ஆவது ஆண்டாக நிழல் நிதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிழல் நிதி நிலை அறிக்கையில் இந்த ஆண்டு 94 தலைப்புகளில் மொத்தம் 417 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய தமிழ்நாடு பொறுப்புடைமை ஆணையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.
ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும். மணல் குவாரிகள் மூடப்படும். வரி சீர்த்திருத்தம் மூலம் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்க்கு திட்டமிடப்படும்.
எந்த திட்டமும் தனி நபரின் பெயரால் அறிவிக்கப்பட மாட்டாது. மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். மாவட்டங்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்படும்.
தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முதல்-அமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார். அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும். மின்கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும். பஸ்கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்.
3 ஆண்டுகளுக்கு பஸ் கட்டண உயர்வு கிடையாது. சென்னையில் 500 இடங்களில் 10 ஆயிரம் சைக்கிள்களுடன் புதிய போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும்.
விவசாயிகளின் ரூ.22 ஆயிரம் கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வேளாண் துறையில் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பள்ளி-கல்விக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். எருமை பாலுக்கு லிட்டருக்கு ரூ.43, பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.33 கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும்.
5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் நிறைவேற்றப்படும். கடலூரில் எய்ம்ஸ்க்கு நிகரான மருத்துவமனை தொடங்கப்படும்.
ஏப்ரல் மாதம் முதல் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்படும். பஸ் நிலையங்கள், பூங்காக்களில் இலவச வை-பை வசதி செய்து தரப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார்.