எல்லாரும் தெலுங்கு பேசுறவங்க.. எப்படி எங்களுக்கு சீட் தருவாங்க.. பாமகவின் புது குண்டு!
சென்னை: பாஜக கூட்டணியில் சேர்ந்த நிலையில் அதில் தாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது இந்த விவகாரத்தை மொழிப் பிரச்சினையாக்கியுள்ளது பாமக.
தெலுங்கர்கள் பிடியில் தமிழக பாஜக சிக்கி விட்டதாக அது குற்றம் சாட்டியுள்ளதாம்.
தெலுங்கர்கள் பிடியில் பாஜக சிக்கி விட்டது. எனவே தெலுங்கர்கள் அல்லாத கட்சிகளுக்கு அது அதிக இடங்களைத் தரும் என்பது சந்தேகம்தான் என்று விஜயகாந்த், வைகோவை மனதில் வைத்துப் பேசி வருகிறதாம் பாமக.
சக்தியே இல்லாத கூட்டணி
பாஜக கூட்டணியைப் பார்த்தால் யாரையுமே பெரிய சக்தி என்று கூறி விட முடியாது.
ப்ளூக்கில் பெரிய ஆள் ஆன தேமுதிக
தேமுதிகவைத்தான் பாஜக கூட்டணியில் பெரிய கட்சி என்கிறார்கள். காரணம் அது சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால். ஆனால் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பு அது வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாக மட்டுமே இருந்தது வந்தது என்பதே வரலாறு. ஒரு எம்.எல்.ஏவை மட்டுமே, அதுவும் கூட விஜயகாந்த்தால் மட்டுமே அக்கட்சி சார்பில் ஜெயிக்க முடிந்தது.
விஜயகாந்த் தலைமையை விரும்பாத பாமக
இப்படிப்பட்ட நிலையில் விஜயகாந்த் மீது ஆரம்பத்திலிருந்தே வெறுப்புணர்வுடன் இருந்து வரும் பாமகவால், தேமுதிகவுக்கு முதல் மரியாதை கொடுப்பதையும், அக்கட்சிக்கு அதிக இடங்கள் தருவதையும் ஏற்க முடியவில்லை.
பாஜக மன உணர்வைப் புரிந்து கொள்ள முடியாமல்
உண்மையில் தேமுதிகவால் பாஜகதான் செம கடுப்பாக உள்ளது. கூட்டணிக்கு தானே தலைவர் என்று பாஜக நினைத்து வருகிறது. ஆனால் நாங்கள்தான் தலைமை தாங்குவோம் என்று தேமுதிக தெனாவெட்டாக கூறி வருகிறது. மேலும் தேமுதிகவை விட தாங்கள் குறைந்த தொகுதியில், அதுவும் சிங்கிள் டிஜிட்டில் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளால் பாஜகவே கூட வெறுப்போடுதான் உள்ளது. இந்த நிலையில் பாமக வேறு தோண்டிய புண்ணை மேலும் நோண்டுவதால் பாஜக செம டென்ஷனாகியுள்ளதாம்.
தெலுங்கர் பிரச்சினையைக் கிளப்பும் பாமக
இந்த நிலையில்தான் புதிதாக தெலுங்கர் பிரச்சினையைக் கிளப்புகிறது பாமக. அதாவது பாஜகவின் தமிழக பொறுப்பாளர்களான வெங்கையா நாயுடு, முரளிதர ராவ் ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். தமிழக பாஜக தொகுதிப் பங்கீ்டுக் குழுவின் உறுப்பினரான மோகன்ராஜுலு தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
இப்படி இருந்தால் பிறகு எப்படி இருக்கும்
இப்படி தெலுங்கு பேசுபவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் தங்களின் குரல் எடுபடாமல் போய் விட்டதாக பாமக குமுறுகிறதாம்.
அப்டீன்னா.. இது எப்படி 'ராமதாஸ் காரு'...??
ஆனால் டாக்டர் ராமதாஸே, கடந்த 3ம் தேதி தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற முற்றிலும் தெலுங்கு மக்களுக்கான கட்சியை தானே தனது கைப்பட தொடங்கி வைத்து இவர்கள் அனைவரும் தமிழ்நாடு வாழ் தெலுங்கர்கள் என்று பெருமை பொங்கப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.
அரசியல்தானே.. எப்படி வேண்டுமானாலும் பேசலாம் போல...!