விஜயகாந்த்தை தோற்கடிக்க பாமக பகீரத பிரயத்தனம் ஏன்?
சென்னை: தங்களது வாக்கு வங்கியை விஜயகாந்த் உடைத்ததால்தான் அவரை தோற்கடிக்க பாமக சார்பில் வலுவான வேட்பாளரை உளுந்தூர்பேட்டை தொகுதியில், களமிறக்கியுள்ளது பாமக தலைமை என்று கிசுகிசுக்கப்படுகிறது.
2005 செப்டம்பரில் தேசிய முற்போக்கு திராவிடர்கழகம் கட்சியை தனது சொந்த மண்ணான மதுரையில் விஜயகாந்த் தொடங்கிய போதிலும், விஜயகாந்த் கட்சியை பலப்படுத்தியது காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற வடதமிழகத்தில்தான்.
இந்த மாவட்டங்கள் வன்னியர்கள் மற்றும் தலித் சமூக மக்கள் கணிசமாக வாழும் பகுதிகளாகும். எனவே பாமகவிலிருந்து வன்னியர் வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தலித் வாக்குகளும் விஜயகாந்த் கட்சிக்கு செல்ல தொடங்கின.
கருப்பு எம்.ஜி.ஆர்
விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, கருப்பு எம்.ஜி.ஆர் என்று தன்னை அழைத்து சூறாவளி பிரசாரம் செய்தார். அதில்தான் பல இளைஞர்கள் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டனர். எனவேதான், ராமதாஸ் மற்றும், திருமாவளவன் இருவரும், விஜயகாந்த்தை சாமானிய நடிகன் என்று கூறி கிண்டல் செய்ய தொடங்கினர்.
பாமக கோட்டையில் வெற்றி
2006ல் பாமகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் கடலூர் மாவட்டத்தின், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றபோது பாமக தலைமைக்கு சற்று ஆட்டம் ஏற்பட்டது.
ராமதாஸ் மாவட்டம்
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த விஜயகாந்த், வேறு எங்கும் நிற்காமல், பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த மண்ணும், அந்த கட்சியின் தலைமையகம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிட்டார். அந்த மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் வென்றதோடு எதிர்க்கட்சி தலைவருமானார்.
4வது இடம்
திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது பெரும் கட்சியாக வளர்ந்து வந்த பாமக, 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது பாமக தலைமைக்கு பெரும் கோபத்தை தேமுதிக மீது ஏற்படுத்தியுள்ளது. எனவேதான், விஜயகாந்த்க்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை வடமாவட்டங்களில் உள்ள வன்னியர் கிராமங்களில் காடுவெட்டி குரு, அண்புமணி ஆகியோர் முன் வைத்தனர்.
விசிகே வெற்றியில்லை
விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாமக போலவே தங்களது பணியை தொடங்கியபோதிலும், பாமக அளவுக்கு அவர்களால் தலித் சமூக இளைஞர்களை விஜயகாந்த் பிடியில் இருந்து இழுக்க முடியவில்லை.
லோக்சபா தேர்தலில் போட்டி
பாமக பலமாகவுள்ள தொகுதி தருமபுரி. தேமுதிகவுக்கும் பலமாக உள்ளது. எனவே பாஜக தலைமையிலான லோக்சபா தேர்தல் கூட்டணியில் இவ்விரு கட்சிகளுமே அங்கம் வகித்தபோது, தருமபுரி வேண்டும் என்று இரு கட்சிகளும் கேட்டன. ஆனால் ராமதாஸ் அந்த தொகுதியை பெற்றதோடு தனது மகன் அன்புமணியை வெற்றி பெற செய்தார்.
இழந்த கவுரவம்
இந்நிலையில் மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் களமிறங்குகிறார் விஜயகாந்த். இந்த முறை விஜயகாந்த்தை உளுந்தூர்பேட்டை தொகுதியில் தோற்கடித்து இனி விஜயகாந்த்துக்கு மதிப்பில்லை என காட்டினால்தான் தனது செல்வாக்கை மீட்க முடியும் என்று பாமக நினைக்கிறது.
வேட்பாளர் மாற்றம்
அதனால் தான் விஜயகாந்த்தை எதிர்த்து பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட ராமமூர்த்திக்கு பதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அறிமுகமான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலுவை நிறுத்தியுள்ளார்.