"யானை"யைப் போல "மாம்பழமும்" போய்விடுமா? சரிவின் விளம்பில் பாமக
சென்னை: தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் ஏற்படுத்திய "கூட்டணி" தாக்கம் அல்லது வியூகம் வரலாறு பேசக் கூடியது. இந்த வியூகத்தால் வீழ்ந்து போய் தற்போது கட்சியின் சின்னத்தை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது.
தேர்தலில் "தேசியக் கட்சிகளுடனும் திராவிடக் கட்சிகளுடன் வானம் உள்ள வரை.. அது இது உள்ளவரை கூட்டணியே கிடையாது" என்று அறிவித்தது பாமக. இப்படித்தான் அதன் தொடக்க காலத்திலும் ஏகப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்து பல்டி அடித்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ் என்பதால் இந்த வசனத்தை யாரும் நம்பவும் இல்லை.
அதற்கேற்பவே தற்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி குறித்து மிகத் தீவிரமாக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். இன்னும் திமுகவுடன் கூட கூட்டணி சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற நிலைமையில் இருக்கிறது பாமக.
1989ல் தனித்துப் போட்டி
பாட்டாளி மக்கள் கட்சி 1989ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டது. ஒரு இடத்தில் கூட வெல்லாமல் போனாலும் அது பெற்ற வாக்குகள் 5.82%. அதைத் தொடர்ந்து யானை சின்னத்தை பெற்றது.
1991லும் தனித்தே போட்டி
பின்னர் 1991ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் லோக்சபா தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது பாமக. அப்போது திமுக பலத்த தோல்வியை சந்தித்த நிலையில் பாமக ஒரு இடத்தைப் பெற்றது.
1996ல் முதல் கூட்டணி
அதன் பின்னர் 1996ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது பாமக. அத்தேர்தலில் 4 பேர் வென்று எம்.எல்.ஏக்களாகினர். அதே நேரத்தில் 1989ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் அதன் வாக்கு வங்கி 3.84%ஆக குறைந்தது. அதேபோல் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியிலும் வெல்ல இயலவில்லை.
பறிபோன யானை சின்னம்
இதனால் பாமகவின் யானை சின்னம் பறிபோய்விட்டது.
1998ல் அதிமுக கூட்டணி
இப்படி நெருக்கடியில் சிக்கிய பாமக, 1998ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்தது.
1999ல் திமுக அணி
ஆனால் ஓராண்டில் அதாவது 1999ஆம் ஆண்டு மீண்டும் வந்த லோக்சபா தேர்தலில் திமுக அணிக்கு போன பாமக 2 மத்திய அமைச்சர்களைப் பெற்றது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
2001-ல் அதிமுக
2வது ஆண்டிலேயே மீண்டும் அதிமுக அணிக்கு தாவி 2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தது பாமக. 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களைக் கைப்பற்றியது.
மீண்டும் பாஜக
தேர்தல் நேரத்தில் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த பாமக, தேர்தல் முடிந்ததும் மீண்டும் பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றது.
2004ல் காங்கிரஸ் அணி
2004ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 6 சீட் ஒதுக்கப்பட்டது. ஒரு ராஜ்யசபா சீட்டும் கிடைத்தது. அப்போதுதான் அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சரானார்.
2006-ல் கடும் சரிவு
2006ஆம் ஆண்டு திமுக அணியில் இடம்பெற்ற பாமக 31 இடங்களில் 18ல் வென்றது. அப்போது விஜயகாந்தின் தேமுதிகவால் இந்த சரிவை சந்தித்தது பாமக. அன்று முதல் இன்று வரை படுக்கையில்தான் இருக்கிறது பாமக.
2009ல் மீண்டும் அதிமுக
2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் அதிமுக அணிக்கு போனது. போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவ பாமகவின் இறுதி அத்யாயம் என வர்ணிக்கப்பட்டது.
2011ல் மீண்டும் திமுக
வழக்கம் போல 2011ஆம் ஆண்டு கூட்டணி தாவி திமுக அணிக்குப் போனது பாமக. 30ல் போட்டியிட்டு 3ல்தான் வென்றது பாமக.
மாம்பழத்துக்கு போராட்டம்
அடுத்தடுத்த தாவல்கள்,, தொடர் தோல்விகளால் பாட்டாளி மக்கள் கட்சி தமது தேர்தல் சின்னமான மாம்பழத்தை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது..
வேல்முருகன் விலகல்
அடுத்தடுத்த தாவல்கள்,, தொடர் தோல்விகளால் பாட்டாளி மக்கள் கட்சி தமது தேர்தல் சின்னமான மாம்பழத்தை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது..
வேல்முருகன் விலகல்
இந்த ஊசலாட்டத்துக்கு இடையே வேல்முருகன், அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி ஊருக்கு ஊர் திராணி காட்டி வருகிறார். வாழ்வா?சாவா என்ற நிலையில் பாமக போராட்டத்துடன் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது
பிடிவாதத்தால் பறிபோகும் பிடிமானம்
ஆனால் பாஜக அணியில் 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பாமக பிடிவாதம் காட்டி வருகிறது. இந்த பிடிவாதமே அதன் பிடிமானத்தை முற்றாக இழக்கச் செய்துவிடும் என்பதே பாமக நடந்து வந்த பாதை காட்டும் நிதர்சனம்.