பட்டா கத்தியுடன் சண்டையிட்டுக் கொண்ட 3 சிறுவர்கள் கைது... சென்னையில் பயங்கரம்
சென்னையில் பட்டா கத்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை: சென்னையில் சத்யம் திரையரங்கு அருகே பட்டா கத்தியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சமீபகாலமாக கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் வலம் வரும் சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரயிலில் சுற்றித் திரிந்தனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல் சமீபத்தில் பட்டரவாக்கம் ரயில் நிலையத்திலும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சக மாணவரை வெட்டினர். இதனால் அந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழக்கிலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வகையில் சென்னை சத்யம் தியேட்டர் அருகே 3 சிறுவர்கள் பட்டா கத்தியுடன் சண்டையிட்டு கொண்டிருந்தனர். பொதுமக்களின் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் 15 வயதுக்குட்பட்ட அந்த 3 பேரையும் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.