சசிகலா புஷ்பா மீது மேலும் ஒரு போலீஸ் புகார்.. இது புதுக்கோட்டையில் !
புதுக்கோட்டை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது எவ்வித ஆதாரமுமின்றி அவதூறு பரப்பி வரும் சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்து தக்க தண்டனை வழங்கிட வேண்டும் என அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சுசிந்திரன் புதுக்கோட்டை போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையைல் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை எனது தலைவர் அறைந்தார் என அடுக்கடுக்காக அதிமுக தலைமை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து சசிகலா புஷ்பா எம்.பி., முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கிளப்புவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை சந்தித்து மனுக்கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாண்டியன், நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார். முதல்வர் தன்னை தாக்கியதாகவும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் அவர் வாய்மொழியாக மட்டுமே சொல்கிறார். இதற்கு அவரிடம் சாட்சியங்கள் இல்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வர் மீது குற்றஞ்சாட்டியதற்காக சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

அதேசமயம், காண்ட்ராக்ட் பெற்று தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக எம்பி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மீது நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை நெல்லை மாவட்டம் சாந்தி நகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகத்தில் அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் சுசிந்திரன் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது எவ்வித ஆதாரமுமின்றி அவதூறு பரப்பி வரும் சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்து தக்க தண்டனை வழங்கிட வேண்டும் என கூறியுள்ளார். சசிகலா புஷ்பா மீது இதுநாள் வரை புகார் அளிக்காமல் இருந்தவர்கள் எல்லாம் இனி வரிசையாக புகார் அளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications