சாத்தூர் பேருந்து துப்பாக்கிச்சூடு: ரஃபீக்கிற்கு 4 நாள் போலீஸ் காவல்- துப்பாக்கி கண்டெடுப்பு
விருதுநகர்: சாத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு ஓடையில் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி என்ற இடத்தில் போலீசார் கண்டெடுத்தனர்.
கடந்த 12ம் தேதி நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சாத்தூரில் நின்ற போது, அந்தப் பேருந்தில் பயணம் செய்த கருப்பசாமி என்பவர், அவர் அருகே அமர்ந்து பயணம் செய்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் 2ம் தேதியன்று அப்துல்லா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கருப்பசாமியின் சகோதரர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அப்துல்லாவின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதியன்று மதுரை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், முகமது ரஃபீக் என்பவர் சரணடைந்தார். இவரை 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ரஃபீக்கின் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, நீதிமன்றத்தில் நேற்று சாத்தூர் 2வது நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.
ரஃபீக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றனத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாத்தூர் 2வது நடுவர் நீதிமன்ற நீதிபதி ரபீக்கை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.
சாத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு ஓடையில் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி என்ற இடத்தில் போலீசார் கண்டெடுத்தனர்.