மதுரையில் வெடிகுண்டு வீசி படுகொலை.. 15 பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம்
மதுரை: மதுரையில் கோர்ட்டில் ஜாமீன் கையெழுத்து் போட்டு விட்டுத் திரும்பியவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி பயங்கரத் தாக்குதல் நடத்தி ஒருவரின் உயிர்ப் பலிக்குக் காரணமான கும்பலைப் பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மொத்தம் 15 பேர் போலீஸாரின் பார்வையில் சிக்கியுள்ளனர். இவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு பசும்பொன் கிராமத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவுக்குச் சென்று விட்டு திரும்பிய மதுரை புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் வந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் 7 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீஸார், அனுப்பானடியை சேர்ந்த ராமர், மோகன், விக்னேஷ், முத்துவிஜயன், சோனையா உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓராண்டு கழித்து கடந்த வாரம் இவர்கள் அனைவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 11 பேரும் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இவர்கள் கோர்ட்டுக்கு வந்து செல்லும்போது போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றும் வழக்கம் போல கோர்ட்டுக்கு இவர்கள் வந்தனர். கையெழுத்துப் போட்டு விட்டுத் திரும்பினர். தெப்பக்குளம் வரை போலீஸார் பாதுகாப்புக்காக வந்தனர். அதன் பின்னர் இவர்களை ஒரு கும்பல் வழிமறித்தது.
அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில், இதில் சிவகங்கை மாவட்டம் பாட்டம் பகுதியை சேர்ந்த முத்துவிஜயன் (24) அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். விக்னேஷ், சோனையா, அர்ச்சுணன், முனீஸ்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிக்க இடத்தில் இந்த சம்பவத்தால் மதுரையே அதிர்ந்தது. இதுகுறித்து தெப்பக் குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டையும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த கொடும் செயலில் ஈடுபட்ட 15 பேரையும் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
ஜாதி ரீதியிலான மோதல் இது என்பதால் மதுரை மற்றும் அக்கம் பக்கத்து மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் வெடித்து விடாமல் தடுக்க போலீஸார் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொல்லப்பட்ட நபரின் ஊரான பாட்டம், மதுரை சிலைமான், அனுப்பானடி, புளியங்குளம் ஆகிய கிராமங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications