அறுதபழசான சிசிடிவிக்களோடு போராடும் சென்னை போலீசார்: குற்றவாளி முகம் சரியாக தெரியவில்லை
சென்னை: சென்னை சென்ட்ரலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் குண்டுவெடிப்பு குற்றவாளியின் படம் பதிவாயிருந்தாலும், தரம் குறைந்த கேமரா என்பதால் குற்றவாளியை சரியாக இனம் காண முடியாமல் காவல்துறை கையை பிசைந்து கொண்டுள்ளது.
மே 1ம்தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெங்களூர்-குவஹாத்தி ரயிலில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண் இறந்தார், 14 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக குறிப்பிட்ட அந்த ரயிலில் இருந்து அவசரமாக இறங்கி ஒரு நபர் ஓடியுள்ளார். அந்த நபர் ஓடும் வீடியோ, சென்ட்ரலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் (சிசிடிவி) பதிவாகியிருந்தது.
சந்தேகத்திற்கிடமான அந்த நபர் முகச்சாயல் வடகிழக்கு மாநிலத்தவரைப்போல இருந்தது. தலை வழுக்கையாக காணப்பட்டது. ஆனால் என்னதான் ஜூம் செய்து பார்த்தாலும், முகத்தை சரிவர அடையாளம் காண முடியவில்லை. நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததுதான் இதற்கு காரணம் என்று காவல்துறை கூறுகிறது.
ஹைடெபினிசன் எனப்படும் ஹெச்.டி கேமராக்களை பொருத்தியிருந்தால், குற்றவாளியின் முகம் பளிச்சென்று தெரிந்திருக்கும், அதை பத்திரிகைகளில் பிரசுரித்து சந்தேகப்படும் நபரை மடக்கி பிடிக்க வசதியாக இருந்திருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு உதாரணங்கள் உள்ளன. சென்னை ஏர்போர்ட்டில் ஹெச்.டி கேமராக்கள் பொருத்தப்பட்டதன் காரணமாக கடந்தாண்டில் மட்டும் விமான நிலைய வளாகத்தில் நடந்த 7 வழக்குகளில் சிசிடிவி உதவியுடன் குற்றவாளிகள் பிடிபட்டனர் என்கிறார் செயின்ட் தாமஸ் மவுண்ட் துணை கமிஶனர் சரவணன். கடந்தாண்டில் சென்னை விமான நிலையத்தில் நடந்த இரு கடத்தல் வழக்குகள் சிசிடிவி உதவியால் சீக்கிரத்தில் முடிவுக்கு வந்ததை உயர் போலீஸ் அதிகாரிகள் நினைவு கூறுகிறார்கள்.
இனியாவது சம்மந்தப்பட்ட நிர்வாகம் பெயருக்கு கேமராக்களை பொருத்தாமல், குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் அவற்றை பொருத்த வேண்டும் என்பதே இந்த குண்டுவெடிப்பு கற்றுத்தரும் பாடம்.