அன்பழகன் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்.. ஜெ. வழக்கு பெங்களூருக்கு மாற இவர்தான் காரணம்!
சென்னை: திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் வீட்டுக்குப் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அன்பழகன்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட முக்கியக் காரணம் ஆவார். திமுக சார்பில் இவர்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, வழக்கை தமிழகத்திலிருந்து மாற்றக் கோரியிருந்தார். இவரது கோரிக்கையை ஏற்றுத்தான் உச்சநீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்றியது என்பது நினைவிருக்கலாம்.
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியான தினத்தன்று கருணாநிதியின் வீட்டுக்கு அதிமுகவினர் படையெடுத்தனர். இதனால் அங்கு திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. பலர் காயமடைந்தனர். இதையடுத்து கருணாநிதி, மு.க.ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரது வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
கீழ்ப்பாக்கம், ஆஸ்பர்ன் கார்டன் பகுதியில் அன்பழகன் வீடு உள்ளது. அங்கு கூடுதலாக போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது அமைதி திரும்பியுள்ளதால் அன்பழகன் வீட்டுக்குப் போடப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம், கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளுக்குப் பாதுகாப்பு தொடர்கிறது.