குடியரசுத் தலைவர் தேர்தல் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு பங்கம் இல்லை...அதுக்கப்புறம்?
நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் ஆட்சி கவிழ்ப்புக்கு வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சென்னை: ஜூலை மாதத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
நாட்டின் குடியரசுத்தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சித் தலைவரான சோனியா காந்தி, பாஜக அல்லாத அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்று பல வியூகங்கள் வெளியான நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 5 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் பாஜவிற்கு தேவைப்படுகிறது.
மாநில கட்சி தயவு தேவை
பாஜக ஆளும் மாநில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஓட்டு மதிப்பு என அனைத்தும் சேர்த்து ஏறத்தாழ 6 லட்சம் ஓட்டுகள் வருகின்றன. எனினும் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் நிச்சய வெற்றி பெற மாநில கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனாலேயே தமிழகத்தில் அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் இருந்தாலும் அவற்றை அசட்டை செய்யாமல் பொறுமையாக காய் நகர்த்தி வருவகதா சொல்லப்படுகிறது.
உள்அர்த்தமா?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கம் முதலே அதிமுக அரசு கவிழ நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சொல்லி வருகிறார். அதிமுகவை இரண்டாகப் பிரித்து எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் என சுமார் 20 பேரை ஓ.பிஎஸ் வசமுள்ள நிலையில் ஆட்சி கவிழ தான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சொன்னால் அதன் உள்ளிருக்கும் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
மெஜாரிட்டி நிரூபிக்க கோர முடியுமா?
இந்நிலையில் தமிழகத்தில் திமுகவின் தொடர் வலியுறுத்தல் காரணமாக அடுத்த மாதத்தில் சட்டசபை கூட்டம் கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை சட்டசபை கூட்டப்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமோ என்ற பயம் முதல்வர் பழனிச்சாமிக்கு உள்ளதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் ஒரு அரசு பெரும்பான்மையை நிரூபித்து 6 மாதங்கள் முடியும் வரை அந்த அரசுக்கு ஆபத்து இல்லை. ஏனெனில் மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்க 6 மாதத்திற்கு பிறகே உத்தரவிட முடியும் என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள். இதனால் முதல்வர் பழனிச்சாமி அரசை இப்போதைக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்பதால் அது அவருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமே.
ஜூலைக்குப் பின் என்ன ஆகும்?
மற்றொரு புறம் டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமி குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்கள் 122 பேர் மற்றும் எம்பிக்கள் 29 பேரின் ஆதரவு யாருக்கு என்பதையும் உறுதிபடுத்திவிட்டு வருவார் என்று தெரிகிறது. எனவே இப்போதைக்கு ஆட்சி மாற்றம் என்பது தமிழகத்தில் இருக்காது என்றும், ஜூலை மாதத்திற்கு பிறகு நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிக்கையாளர்களும்.