அதிமுக பிரமுகரின் “அலைபாயுதே” ஸ்டைல் திருமணம் – போலீஸில் தஞ்சம்
பொள்ளாச்சி: அலைபாயுதே பட மாதவன் - ஷாலினி பாணியில் திருமணம் செய்த வாலிபர், மனைவியுடன் போலீஸில் சரணடைந்துள்ளார்.
பொள்ளாச்சி மரப் பேட்டையைச் சேர்ந்தவர் மார்ட்டீன். அங்குள்ள வங்கி ஒன்றின் துணைதலைவர்.
மேலும்,இவர் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளராகவும் உள்ளார். சமுதாய பணிகளில் அதிக நாட்டம் உள்ளவர்.
பற்றிக் கொண்ட காதல்:
மரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் செல்லத்துரை. இவரது மகள் வர்ஷினி. பட்டதாரிப் பெண்ணான வர்ஷினி கடந்த 2013ஆம் ஆண்டுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த திருமணத்துக்கு சென்றார். அந்த திருமணத்துக்கு மார்ட்டீனும் வந்திருந்தார்.
சமூக சேவை:
அப்போது வர்ஷினி தானாகவே முன்வந்து மார்ட்டீனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது "நீங்கள் எங்கள் பகுதிக்கு செய்யும் சமூக சேவை என்னை பெரிதும் கவர்ந்துள்ளது.
நீங்கள்தான் என் கணவர்:
எனக்கு கணவராக வரப்போகிறவர் சமுதாய சேவையில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும் என்றும் நானும் விரும்புகிறேன். எனவே உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன்" என்றார்.
ஆனந்த அதிர்ச்சி:
இதைக்கேட்டு மார்ட்டீனுக்கு ஆனந்த அதிர்ச்சி. இருப்பினும் "உங்களுக்கும், எனக்கும் வயது வித்தியாசம் அதிகம். மேலும் நான் கிறிஸ்தவன். நீங்கள் வேறு மதம். எனவே என்னை நீங்கள் என்னை திருமணம் செய்வதை உங்கள் பெற்றோர் ஏற்க மாட்டார்கள். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம்" என்று எவ்வளவோ சமரசம் சொல்லிப்பார்த்தார்.
வாழ்ந்தால் உன்னோடுதான்:
ஆனால் வர்ஷினி அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வாழ்ந்தால் உங்களோடு தான். இல்லையேல் எனக்கு அந்த வாழ்க்கை தேவையில்லை என்று கறாராக கூறிவிட்டார்.
காதலுக்கு சம்மதம்:
நாம் விரும்பும் பெண்ணை விட நம்மை விரும்பும் பெண்ணை திருமணம் செய்வது சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்த மார்ட்டீனும் திருமணத்துக்கு சம்மதித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனம் விட்டு பேசினர்.
பெண் வீட்டில் எதிர்ப்பு:
மகளின் காதல் விவகாரம் செல்லத்துரைக்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகளுக்கு வேறு இடத்தில் வரன் பார்க்க தொடங்கினார். இதுகுறித்து வர்ஷினி தனது காதலனிடம் கூறினார்.
நண்பர்கள் மூலம் திருமணம்:
இருவரும் கலந்தாலோசித்த முடிவுப்படி கடந்த 13 ஆம் தேதி இருவரும் பொள்ளாச்சியில் உள்ள கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
தாலியை மறைத்த மணப்பெண்:
பின்னர் முறைப்படி திருமணத்தை பதிவு செய்தனர். அதன் பின்னர் வர்ஷினி தனது வீட்டுக்கு சென்று விட்டார். தாலியை மறைத்தபடி கடந்த 24 ஆம் தேதி வரை பெற்றோர் வீட்டில் இருந்தார்.
இது தாங்காது:
இந்நிலையில், இப்படியே தாலியை எத்தனை நாளைக்கு மறைத்துக்கொண்டு வாழ முடியும், வெளிப்படையாக கணவருடன் சேர்ந்து வாழ வேண்டியது தான் என முடிவு செய்த வர்ஷினி தனது மனதுக்குப் பிடித்த மணவாளனுடன் ஈரோட்டுக்கு கிளம்பினார்.
மிரட்டிய தந்தை:
மகளை காணாத தந்தை பல்வேறு இடங்களில் தேடினார். எப்படியோ மணமக்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டனர். மார்ட்டீனை விட்டு விட்டு வந்து விடு. இல்லையேல் அவனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிப்பார்த்தனர்.
போலீஸில் சரண்:
எதற்கும் வளைந்து கொடுக்காத வர்ஷினி இன்று காலை பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் முன்னிலையில் போலீஸில் தஞ்சமடைந்தார். அவர் வர்ஷினியின் பெற்றோரை அழைத்து சமரசம் பேசி வருகிறார்.