நெருங்கும் பொங்கல்.. களைகட்டிய பானை உற்பத்தி
பொங்கல் விழா நெருங்கி வருவதால் மண் பானை உற்பத்தி அதிகரித்து வருகிறது.
Recommended Video
வேதாரண்யம்: பொங்கல் விழா நெருங்கி வருவதால் மண் பானை உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் விற்பனையும் அதிகரித்து இருக்கிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், செம்போடை பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் காலம்காலமாக திருவை வைத்து கையால் மண்பாண்டம் செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பொங்கல் பானை, அடுப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மண்பாண்டம் செய்வதற்கு மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் மாட்டுவண்டியில் ஒரு லோடு மண் ரூ.2000க்கு வாங்கி வருகின்றனர்.
இருப்பினும் வருவாய் துறையினர் கெடுபிடியால் போதிய மண் அள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வெயில் அடித்து வருவதால் மண்பாண்டங்கள் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பானையை ரூ.20 முதல் ரூ.30க்கு மட்டுமே வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் தொழிலாளர்களுக்கு கட்டுப்படியான விலை கூட கிடைக்கவில்லை. எனவே தொழில் செய்வதற்கு வங்கி கடன் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மின் உபகரணங்கள் வாங்கி உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் பெற முடியும் என்று மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.