"தமிழர்களின் பெருமை" கலாமுக்கு அதிமுக ஆட்சி செய்த அங்கீகாரம் என்ன?- பிரேமலதா கேள்வி
ராமேஸ்வரம்: சர்வதேச அளவில் தமிழர்களுக்கு பெருமைத் தேடி தந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அதிமுக ஆட்சி செய்த அங்கீகாரம் என்ன என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 84வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தேமுதிக சார்பில் மாணவர் தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
ஊழலுக்கு அப்பாற்பட்டவர்...
அப்போது பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் பெருமையாக, அடையாளமாக, ஏவுகணை சரித்தர நாயகன் என பெயர் பெற்றவர், தமிழன் என உலக மக்களால் பெருமையாக வாழ்ந்தவர், எளிமையான நல்ல மனிதர், லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
ஏவுகணை நாயகன்...
இன்று (நேற்று) அவருடைய பிறந்த நாள். டெல்லியில் ஒரு தெருவுக்கு அவருடைய பெயரை வைத்துள்ளனர். ஒரு மாநிலத்தில் தீவுக்கு அவருடைய பெயரை வைத்துள்ளனர். ஹைதராபாத்தில் அவருடைய பெயரில் ஏவுகணை தளம் உருவாக்கியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடந்திருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்.
இது தான் மரியாதையா?
அப்துல் கலாம் இறுதி சடங்கில் பாரத பிரதமர் முதல் அண்டை மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட இந்தியாவில் இருந்து பலர் கலந்து கொண்டனர். ஆனால் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா இந்த பக்கம் வரவில்லை. இதுதான் ஒரு தமிழருக்கு தமிழ்நாடு அரசு கொடுக்கக் கூடிய மரியாதையா.
தமிழினத்திற்கே மரியாதை...
நேற்று (நேற்று முன்தினம்) தான் தனி விமானம் மூலம் கோவைக்கு சென்று அங்கிருந்து கொடநாடு சென்றுள்ளார் ஜெயலலிதா. ஏன் அதே ஹெலிகாப்படரை ராமேஸ்வரம் பக்கம் திருப்பியிருந்தால், அரை மணி நேரம் அப்துல்கலாம் பிறந்த மண்ணில் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் மரியாதை செலுத்தியதாக இருந்திருக்கும். செய்தாரா ஜெயலலிதா.
சுயநலமான அரசியல்...
இன்றைக்கு ஒரு சுயநலமான ஒரு அரசியலும், சுயநலமான தலைவர்களும் வாழக்கூடிய ஒரு பகுதியாக தமிழ்நாடு மாறிவிட்டது. மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் அப்துல்கலாம் பற்றி புகழுகிறார்கள். தமிழர்களுக்கே பெருமைத் தேடி தந்த அப்துல்கலாமுக்கு அதிமுக ஆட்சி செய்த அங்கீகாரம் என்ன?
வெறும் கடிதம் மட்டுமே...
தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஜெயலலிதா, பிரதமருக்கு வெறும் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார். விலைவாசி உயர்வு இன்று மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த திமுக ஆட்சி நடந்தபோது ஜெயலலிதா ஒரு பட்டியலை வைத்து வாசித்தார்.
பெண்களின் கண்ணீர்...
அதாவது உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சர்க்கரை என்ன விலை என்று வாசித்தார். கலைஞர் ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரும் பெண்மணி. பெருங்காயத்தில் இருந்து வெங்காயம் வரை எந்த விலையை கேட்டாலும் பெண்களுக்கு கண்ணீர்தான் வருகிறது.
தரமற்ற மதிய உணவு...
அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்பட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. பள்ளிகளில தரமற்ற வகையில் மதிய உணவு வழங்கப்படுகிறது' என தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்தார்.