பிரான்ஸிற்கு தப்ப இருந்த கைதி தவமணி- புதுச்சேரியில் சிக்கினார்... திடுக் தகவல்கள் வெளிவருமா?
திருச்சி: புனேயில் கடந்த நவம்பர் மாதம் தப்பி ஓடிய திருச்சி கைதி தவமணி பிரான்சிற்கு தப்பித்துச் செல்லும் முன்னர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் தவமணி. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஒருவரிடம் டிரைவராக பணிபுரிந்த இவர், 2005 ஆம் ஆண்டு குரூப் 2 வினாத்தாளை தேர்வுக்கு முன் வெளியிட்டு ரூபாய் 300 கோடி வரை சுருட்டியுள்ளார்.
போலீசார் வழக்கு பதிந்து தவமணி உள்ளிட்ட சிலரை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்த போது தவமணி மட்டும் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறைக்கு அடைக்கப்பட்டார்.இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்காக தவமணியை, கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருச்சி மாநகர ஆயுதப்படை போலீசார் புனேவுக்கு ரயிலில் அழைத்து சென்றுவிட்டு, மீண்டும் திருச்சிக்கு அழைத்துவந்தபோது, ஓடும் ரயிலில் இருந்து தவமணி தப்பினார்.
இதுதொடர்பாக எஸ்.ஐ, சிறைவார்டன்கள் உள்பட 9 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தப்பியோடிய தவமணியை பிடிக்க உதவி கமிஷனர் அருள் அமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தவமணியை தனிப்படையினர் கைது செய்தனர். நேற்று அதிகாலை திருச்சி கே.கே.நகரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
தீவிர விசாரணைக்கு பின் நேற்று மாலை திருச்சி ஜேஎம் 2 நீதிபதி முரளிதரன் கண்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட தவமணி பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த 8 மாதமாக தனிப்படை போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த தவமணி, புதுச்சேரி மருத்துவமனையில் சிக்கியது எப்படி என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியானது.
புதுச்சேரியில் வீடு எடுத்து தங்கியிருந்த தவமணிக்கும், அவரது மனைவி எழிலரசிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. தகராறில் எழிலரசி தீக்குளித்துள்ளார். அவரை காப்பற்றும் போது தவமணிக்கும் கை மற்றும் உடம்பில் தீக்காயம் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்துடன் மனைவியை காப்பாற்றி காரில் புதுச்சேரி ஜிப்மா மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்.
2 பேரும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.டவுன் போலீசார் மருத்துவமனையில் எழிலரசியிடம் விசாரிக்க சென்ற போது அங்கு தவமணியும் சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் டவுன் போலீசார் திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்த போது சிகிச்சை பெற்று வந்தது தவமணி தான் என உறுதியானது. அதன் பின்னரே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் விசாரணையில், குரூப் 2 வினாத்தாள் வெளியிட்டதன் மூலம் யார், யாருக்கு தொடர்பு, ரயிலில் இருந்து தப்பிய போது யார், யார் உதவியது. புனேயில் உதவி செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி யார் என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தவமணி தனிப்படை போலீசாரிடம் பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவமணிக்கு உதவி செய்த போலீஸ் முதல் உயர் அதிகாரிகள் வரையிலும் கலக்கத்தில் உள்ளனர்.
போலீஸ் பிடியில் இருந்து தப்பியதால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவர் வெளிநாடு தப்பிக் காமல் இருக்க அனைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏர்போர்ட் இமிகிரேச னுக்கு அவரது போட்டோ அனுப்பப்பட்டு இருந்தது. பிரான்ஸ் நாட்டு குடியுரிமை உள்ளவர்கள் புதுச்சேரியில் ஏராளமானோர் உள்ளனர்.
தவமணிக்கு பிரான்ஸ் நாட்டில் உறவினர்கள் இருப்பதால் போலி பாஸ்போர்ட் தயார் செய்து மாறுவேடத்தில் மனைவியுடன் பிரான்ஸ் நாடு தப்பிக்க முடிவு செய்து புதுச்சேரி டவுன் பகுதியில் வீடு எடுத்து பதுங்கி யிருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கொண்டு போலி பாஸ்ேபார்ட் தயார் செய்து பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிக்க செல்லவும் திட்டமிட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.