அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளும் இன்று திறப்பு.. நோ ஸ்டிரைக்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிவித்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கவுள்ளன.
இருப்பினும் பள்ளிகளின் தாளாளர்கள் மட்டும் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பல்வறு தரப்பினரும் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தனியார் பள்ளி, கல்லூரிகளும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன.
இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தைதமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வாபஸ் பெற்றது.
இதுகுறித்து அமைப்பின் செயலாளர் டி.சி.இளங்கோவன் நேற்று தர்மபுரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நல்ல பல திட்டங்களை ஏற்படுத்தி அதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரும் கல்வி கற்கும் வகையில் ‘விஷன் 2023' என்ற கனவு திட்டத்தை ஏற்படுத்திய தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவரை விடுதலை செய்யக்கோரியும் செவ்வாய்க்கிழமை அனைத்து தனியார் பள்ளிகளும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தனியார் பள்ளி தாளாளர்கள், நிர்வாகிகள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கும் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மாணவர்களின் நலனே அனைத்திலும் முக்கியமானது என்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் திறக்கப்படும். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்.
இருப்பினும் ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் திட்டமிட்டப்படி கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தப்படும். இதில் பள்ளி தாளாளர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றார் அவர்.
அதேபோல, தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சிவானி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் கல்வித்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. குறிப்பாக தொழிற்கல்வியை ஊக்குவிக்க பல்வேறு கட்ட முயற்சிகளை அவர் மேற்கொண்டார். கல்வியில் தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வர அவர் எடுத்த முயற்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
பல்வேறு கனவு திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தினார். தற்போது ஏற்பட்டு உள்ள சூழ்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், பெங்களூர் சிறையில் இருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று இந்த உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெறும். திருச்சியில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள், சுயநிதி பொறியியல் கல்லூரி அதிபர்கள் கலந்துகொள்கிறார்கள். அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 550 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் இன்று வழக்கம் போல் செயல்படும் என்றார் அவர்.