8.30 மணிக்கே தேர்வு முடிவுகளை வெளியிட்ட சில தனியார் பள்ளிகள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?
சென்னை: அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக சர்ச்சை உண்டாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
இத்தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னையில் உள்ள கல்வித்துறை இயக்குநர் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இணையதளத்திலும் வெளியானது.
ஆனால், அதற்கு முன்னதாக ஒவ்வொரு பள்ளிக்கும் தேர்வு முடிவுகள் அடங்கிய கவர்கள், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் காலை 8 மணிக்கு வழங்கப்படுவது வழக்கம். பள்ளிக் கல்வித்துறை தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அவை பிரிக்கப்படுவது முறை.
ஆனால், இன்று புதுக்கோட்டையில் உள்ள சில தனியார் பள்ளிகள் காலை 8.30 மணிக்கே தங்களுக்கு வழங்கப்பட்ட கவர்களை பிரித்து தேர்வு முடிவுகளை அறிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விவரம் முன்கூட்டியே தெரிய வந்தது. இதேபோல கடைசியாக வெளியான +2 தேர்வு முடிவுகளும் இப்பள்ளிகளில் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.