ஒரு நாளைக்கு ஒரு துறை.. கட்டாயப்படுத்தி நடக்கும் ஸ்டிரைக்... மக்கள் கடும் அதிருப்தி
சென்னை: ஜெயலலிதா கைதைக் கண்டித்து ஒரு நாளைக்கு ஒரு துறை என்ற ரீதியில் கட்டாயப்படுத்தி போராட்டம் நடத்த வைத்து வருகிறது அதிமுக. இதனால் மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
இந்தக் கட்டாயப் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஜெயலலிதா கைதால் மக்களிடையே ஏற்பட்டிருந்த அனுதாபம் நொறுங்கிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளைக்கும் ஒரு துறை சார்பில் போராட்டம் நடத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடமிருந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகள் போய்க் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதலில் பஸ் ஸ்டிரைக்
முதலில் போக்குவரத்துத் துறையின் கீழ் வரும் தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்கில் குதித்தன. இந்த ஒரு நாள் ஸ்டிரைக்கால் தமிழகம் முழுவதும் மக்கள் ஊர்களுக்குச் செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது.
கடைகள் அடைப்பு
அதேபோல தமிழகம் முழுவதும் தொடர்ந்து கடைகளை அடைக்குமாறு கூறி அதிமுகவினர் வற்புறுத்தி வருவதால், ஆங்காங்கே தொடர்ந்து கடையடைப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிமுகவினருக்குப் பயந்து கடைகளை அடைக்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்படுகின்றனர்.
கட்டாயப்படுத்துகிறார்கள் - வெள்ளையன் புகார்
கடைகளை அடைக்குமாறு கூறி அதிமுகவினர் தங்களை கட்டாயப்படுத்துவதாக, மிரட்டுவதாக வியாபாரிகள் சங்கங்களின் தலைவரான த. வெள்ளையனே புகார் கூறியுள்ளார்.
மினி பஸ் ஸ்டிரைக்
தனியார் பேருந்துகள் ஸ்டிரைக் தவிர மினி பஸ்களை மட்டும் தனியாக ஒரு நாள் ஸ்டிரைக் செய்யச் சொல்லியுள்ளனராம். இதனால் கிராமப்புறங்களில் மினி பஸ் சேவை பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இன்று ஆம்னி பஸ் ஸ்டிரைக்
அதேபோல இன்று பகலில் ஆம்னி பஸ்கள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மட்டும் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கும் நிர்ப்பந்தம்
இதேபோல தனியார் பள்ளிக்கூடங்களை ஒரு நாள் மூடி ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வந்த நிர்ப்பந்தம் காரணமாக அவர்களும் இன்று ஸ்டிரைக் அறிவித்தனர். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதை வாபஸ் பெற்றனர். ஆனாலும் இன்று பல பள்ளிகள் திறக்கப்படவில்லை.
கிராமப்புற கலைஞர்களும் போராட்டம்
அதேபோல இன்று சென்னையில் கிராமப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில் ஒரு போராட்டம் நடக்கிறது. அதற்கும் நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திரைத்துறைக்கும் கூட பயம்தான் காரணம்
அதேபோல சமீபத்தில் திரைத்துறையினர் சார்பில் சென்னையில் "மெளன" உண்ணாவிரதப் போராட்டம் நடந்துது. அரசுக்குப் பயந்தே இந்த போராட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.
இப்படிப் பேசலாமா நடராஜ்
இந்தப் போராட்டங்கள் குறித்து சமீபத்தில் காவல்துறை டிஜிபி பதவி வகித்து பின்னர் அதிமுகவில் இணைந்து விட்ட நடராஜ் கருத்து தெரிவிக்கையில், மக்கள் கோபம்கொண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களைப் பாதிக்கும் எந்த செயலையும் தடுக்க வேண்டியது காவல்துறை. அப்படிப்பட்ட காவல்துறையில் உயர் பதவி வகித்த ஒருவர் இப்போத ஒரு கட்சியில் சேர்ந்து விட்ட காரணத்திற்காக இப்படிப் பேசலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளிகள் ஸ்டிரைக்
இந்த நிலையில் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தனியார் பள்ளிகளின் ஸ்டிரைக் அறிவிப்பு பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. கல்வியிலும் அரசியலைப் புகுத்துவதா என்ற கொந்தளிப்பும் ஏற்பட்டு விட்டது.
உயர்நீதிமன்றத்தில் கேஸ்
இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநலன் மனு ஒன்று அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு பயந்து போனது. இதையடுத்தே போராட்டத்தை அது திரும்பப் பெற்றது.
யார் உத்தரவின் பேரில் ஸ்டிரைக்
தனியார் பள்ளிகளின் இந்த ஸ்டிரைக் அறிவிப்பு பின்னணியில் ஆளுங்கட்சியினர் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பாய்ந்ததால் பயந்து போய் அவர்கள் பின்வாங்கியுள்ளனர்.
அனுதாபத்தை அம்போவாக்கும் அதிமுகவினர்
அதிமுகவினரின் இந்த செயல்கள் ஜெயலலிதா மீது மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபத்தையும் காலி செய்வதாகவே உள்ளது. தங்களது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கு காட்டுவதாக நினைத்துக் கொண்டு அரசுக்கு மொத்தமாக ஆபத்தை தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் என்பதே உண்மை.
கிரானைட் கும்பலும் போராட்டம்..
இவ்வாறாக கோழிக்கடைகளில் ஆரம்பித்து பால் பாக்கெட் பொறுக்குபவர்கள் வரை என சகலவிதமானவர்களையும் போஸ்டர் ஒட்டி, கண்டனப் போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட கிரானைட் ஏற்றுமதி உரிமையாளர்கள் சங்கமும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளது தான் இதில் வேடிக்கை. கிரானைட் விஷயத்தில் இவர்கள் செய்த முறைகேடுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழு விசாரித்து வரும் நிலையில் அம்மாவுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளனர் இவர்கள்.