டிடிவி தினகரன் அணியால் ஈபிஎஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியுமா?
தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களால் முடியுமா முடியாதா என்பதே இப்போதைய அரசியல் பரபரப்பு.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது டிடிவி தினகரன் அணி சட்டசபை உறுப்பினர்களால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியுமா என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுகவினர் மத்தியில் குழப்பம் கலந்த பரபரப்பு நிலவுகிறது.
இப்போதைய சூழலில், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர 24 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதற்குக் குறைவாக இருந்தால் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை சட்டசபையில் உயர்ந்துள்ளது. அதே சமயம், டிடிவி தினகரனுக்கு 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பதால், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு மிகப் பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பரில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை (சபாநாயகருடன் சேர்த்து) 135- ஆக உள்ளது.

ஆதரவை விலக்கிய 19 பேர்
அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அவருடன் சேர்த்து 10 பேர் இருந்தனர். இரு அணிகள் இணைந்த பிறகு, அதிமுகவின் பலம் உயர்ந்தாலும், டிடிவி தினகரன் அணிக்கு இப்போது 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எண்ணிக்கை குறைவு
ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைந்துள்ளதால் மெஜாரிட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது பெரும்பான்மை எண்ணிக்கையான 117 விட ஒன்று குறைவாகும்.

திமுக கோரிக்கை
இந்தக் காரணத்தாலேயே தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டுமென திமுக கோரிக்கை வைத்துள்ளது. என்ன நடக்கும் என்பது ஆளுநர் முடிவைப் பொறுத்தே உள்ளது.

பேரவை விதியில் தெளிவு
சட்டசபையில் ஓர் அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தைப் பேரவை உறுப்பினர்களே கொண்டு வரலாம் எனப் பேரவை விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விதி 72 உட்பிரிவு 1-ல் உள்ள விவரங்கள்
அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானம் முறைப்படி உள்ளது என்று பேரவைத் தலைவர் கருதினால் அதனைப் பேரவைக்குப் படித்துக் காட்டி அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். 24-க்குக் குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவைத் தெரிவித்தால் பேரவை அனுமதி கொடுத்து விட்டது என்று அறிவித்து அனுமதி அளிக்கப்படும்.

24 பேருக்குக் குறைந்தால் செல்லாது
இந்த அனுமதி அளிக்கப்பட்ட நாளில் இருந்து பத்து நாள்களுக்கு மேற்படாது பேரவைத் தலைவர் குறிப்பிடும் நாளில், அந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். 24-க்குக் குறைவான உறுப்பினர்கள் எழுந்து நின்றால், பேரவை அனுமதி கொடுக்கவில்லை என்று பேரவைத் தலைவர் அறிவித்து விடுவார் என, சட்டசபை விதியில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 19 பேர்தான்
சட்டப் பேரவை விதிப்படி அமைச்சரவையின் மீது டிடிவி தினகரன் அணியினர் நம்பிக்கையின்மை தெரிவிக்க வேண்டுமானால், அவர்களுக்கு 24 உறுப்பினர்கள் தேவை. ஆனால், இப்போது வரை 19 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆளுநர் முடிவைப் பொறுத்தே அரசு
இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறார் என்பதே முக்கியமானது. அதை பொறுத்தே திமுக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications