ஹைட்ரோ கார்பனை எதிர்த்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தலாம்.. அனுமதி வழங்கியது ஹைகோர்ட் மதுரை கிளை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்த தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கோரி புதுக்கோட்டையில் நாளை போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்களோடு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து 93 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனுமதி மறுப்பு
இந்நிலையில், ஹைட்ரோ கார்பனை எதிர்த்து புதுக்கோட்டையில் நாளை போராட்டம் நடத்த நெடுவாசல் போராட்டக் குழுவினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கொடுக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

எதிர்த்து வழக்கு
இதனைத் தொடர்ந்து, நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தேவையற்ற போராட்டம்
அப்போது, போலீசார் தரப்பில் சின்னப்பா பூங்கா மிகச் சிறியதாக இருந்ததால் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று பதில் கூறப்பட்டது. மேலும், இந்தப் போராட்டம் தேவையற்றது என்றும் கூறப்பட்டது.

ஹைகோர்ட் அனுமதி
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், சின்னப்பா பூங்காவிற்கு பதில் தடிகொண்ட அய்யனார் திடலில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. நாளை மாலை 2 மணி முதல் 5 மணி வரை போராட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications