10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 10 பேரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கும்பகோணம்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய 10 பேரை விடுதலை செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என கதிராமங்கலம் மக்கள் அறிவித்துள்ளனர்.
கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
10 பேர் கைது
இதையடுத்து ஓஎன்ஜி குழாயை அகற்றக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசாரோ தடியடி 10 பேரை கைது செய்தனர்.
விடுதலை கோரி போராட்டம்
தற்போது ஓஎன்ஜிசி காவிரி டெல்டாவை விட்டு வெளியேற வேண்டும்; கைது செய்யப்பட்ட 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் தமிழக அரசும் மத்திய அரசும் இப்போராட்டங்களை மதிக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறது.
மார்க்ஸ் குழு ஆய்வு
இதனிடையே மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான குழுவினர் கதிராமங்கலத்துக்கு இன்று சென்றனர். அங்கு மக்களை சந்தித்து நிலைமையை பதிவு செய்தனர்.
அரசுகளிடம் அறிக்கை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ. மார்க்ஸ், கதிராமங்கலம் நிலவரம் தொடர்பான அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்புவோம்; தேவை எனில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம் என்றார்.
போராட்டம் தொடரும்
அதேபோல் பொதுமக்களும் 10 பேரையும் விடுதலை செய்யும் வரை எங்கள் போராட்டம் ஓயாது; அனைவரும் விடுதலையாகும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.