கிரண்பேடிக்கு எதிராக.. ஆளுநர் அதிகாரத்தை குறைத்து புதுவை சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
புதுவையில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுவை: ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாராயணசாமியை முதல்வராகக் கொண்டு காங்கிரஸ் கட்சி புதுவையில் ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தலையிட்டு வருகிறார்.
யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வரும் நிலையில், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் புதுவையில் செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
நாராயணசாமி புகார்
இந்நிலையில், புதுச்சேரியின் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண் பேடி தேவையற்ற முறைகளில் தலையீடு செய்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதுவை முதல்வர் நாராயணசாமி புகார் தெரிவித்தார்.
கிரண்பேடி புகார்
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் டெல்லி சென்ற கிரண் பேடி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் நாராயணசாமி பற்றியும் புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்தும் கிரண் பேடி விரிவாக மோடியிடம் கூறியுள்ளார்.
சட்டசபையில் தீர்மானம்
இந்நிலையில், இன்று புதுவை சட்டசபையில், அதிமுக எம்எல்ஏ அன்பழகன், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் அரசின் தீர்மானமாகக் கொண்டு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
தீர்மானத்தின் மீது சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியை பொறுத்தவரை சட்டசபைக்குதான் அதிக அதிகாரம் உள்ளது என்று கூறினார். மேலும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறிக்கும் விதத்தில் ஆளுநர் செயல்படுவதை ஏற்க முடியாது என்று நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.