தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை மீண்டும் உயர்வு
சென்னை: தமிழகத்தில் தனியார் பால், தயிர் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பால், தயிர் ஆகியவற்றின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹெரிடேஜ் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது. இந்நிலையில் திருமலா, ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து இன்று அறிவித்துள்ளது.
இது தவிர ஆரோக்கியா, டோட்லா பால் விலையும் வரும் 12ம் தேதி உயர்த்தப்படுகிறது. தனியார் பால் தவிர பாக்கெட் தயிர், கப் தயிர் ஆகியவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில் 40 நாட்களில் தனியார் பால் விலை 2வது முறையாக உயர்த்தப்பட்டதை தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பால் விலை உயர்வை தடுக்கக் கோரி முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்தோம். மேலும் பால் வளத்துறையினரிடம் நேரில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இது குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கும் எங்கள் சங்க ஆண்டு விழாவின்போது போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.