முதலில் தேமுதிக, அடுத்த தமாகா.. இப்போது தமுப... தாறுமாறாக சிதையும் ம.ந.கூ.!
சென்னை: சட்டசபை தேர்தலின் போது திமுக- அதிமுகவுக்கு மாற்றாக அறிவித்துக் கொண்ட மக்கள் நலக் கூட்டணி தற்போது கட்டெறும்பாக தேய்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கமாக உதயமானது. பின்னர் இது தேர்தலுக்கான மக்கள் நலக் கூட்டணியானது.
சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமாகா, தமிழர் முன்னேற்றப் படை கட்சி என பல கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தன. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்றெல்லாம் அறிவித்த கையோடு யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்றெல்லாம் கூட ஒதுக்கீடு செய்தார்கள்.
அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்
ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த போது அனைத்தும் டமாலாகிப் போனது... ஆம் மக்கள் நலக் கூட்டணியும் அதை நம்பி வந்த கட்சிகளும் டெபாசிட்டை பறிகொடுத்து பரிதவித்தன. இதனால் ஒவ்வொரு கட்சியாக மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகின.
அடுத்தடுத்து விலகல்...
தேமுதிக, தமாகா என அடுத்தடுத்து மக்கள் நலக் கூட்டணிக்கு பெரும் கும்பிடு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகினர். தற்போது மீண்டும் திமுக கூட்டணிக்கே திரும்பிவிடலாமா என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தனித்துவிடப்படும் மதிமுக
இதே பாதையில் இடதுசாரிகளும் பயணிக்கலாம் எனவும் மதிமுக மட்டுமே மக்கள் நலக் கூட்டணியில் தனித்த ஒரு கட்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியும் அறிவித்திருக்கிறார்.
வீரலட்சுமியும் எஸ்கேப்
இத்தனைக்கும் வீரலட்சுமிக்கு மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் அவர் மண்ணைத்தான் கவ்வினர். தற்போது மக்கள் நலக் கூட்டணி மீது விமர்சனங்களையும் வைக்கத் தொடங்கியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்காக மையம் கொண்ட மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலுக்குள் காணாமலேயே போய்விடும் என்றே தெரிகிறது.