பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலையில் தமிழக முதல்வரின் முடிவை வரவேற்க வேண்டும்: ராம்ஜெத்மலானி
சென்னை: முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த முடிவு சரியான நடவடிக்கை ஆகும் என மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

முதல்வெற்றி
முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் மீதான தூக்கு தண்டனையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தூக்குதண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது நமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

வெற்றி தொடரவேண்டும்
அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனையை ரத்து செய்து வந்த அறிவிப்பு இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றி தொடரவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு வாழ்த்து
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை சரியானதாகும். விதிமுறைகளை மீறாமல் சட்டத்துக்கு புறமாக எதுவும் செய்யவில்லை. தற்போது உச்சநீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடை தற்காலிகமானது.

மரணத்தின் பிடியில்...
இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து மரணத்தின் பிடியில், அதன் நிழலில் சிக்கி தவித்தனர். இது 5 ஆயுள் தண்டனைக்கு சமமானது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் விரிவாக எடுத்துரைப்பேன்.

தமிழக அரசு சரியான முடிவு
ஆனால் மத்திய அரசில் உள்ள சிலர் தமிழக அரசு தவறு செய்துவிட்டதாகவும், விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறியிருப்பது சரியானதல்ல. பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்து கூறியதற்கு வருகிற லோக்சபா தேர்தலில் மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்.

இரட்டை தண்டனை
உச்சநீதிமன்ற விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசின் சீராய்வு மனுவை எதிர்த்து போராட எல்லா வழிவகைகளும் தமிழக அரசுக்கு உள்ளன. அவர்கள் விடுவிக்கப்பட்டதன் காரணம் இரண்டு தண்டனைகள் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான். அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரசியல் சாசனத்திலேயே அப்படி இல்லை என்றார் ராம் ஜெத்மலானி.












Click it and Unblock the Notifications