விரலை ரெடியா வச்சுக்கங்க மக்களே... கிறிஸ்துமஸுக்கு முன்பே ஆர்.கே.நகர் தேர்தல்?
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்படவிருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து போலி வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாகவும், பணப்பட்டுவாடா தொடர்பாகவும் திமுக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே ஆர்.கே.நகருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்திருந்தார். இதையடுத்து தேர்தல் தொடர்பான திமுக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தலில் அறிவிப்பதில் முடிவு எடுக்கப்பட முடியவில்லை என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.
இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பாணை டிசம்பர் முதல் வாரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்னும் ஓரிரு நாள்களில் டெல்லி செல்வார் என்றும் அதன்பிறகு அறிவிப்பாணை வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றனர்.
மேலும் இரு நாட்களுக்குள் அறிவிப்பாணை வெளியிடப்பட்டால் 26 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications