ஆர்.கே. நகர் யாருக்கு?: ஈபிஎஸ்...ஓபிஎஸ்... ஸ்டாலின், தினகரன் அத்தனை பேருக்கும் ஆசிட் டெஸ்ட்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு ஆளுங்கட்சி, எதிர்கட்சி, தேசியக்கட்சி, சுயேட்சை என அத்தனை பேருக்குமே ஆசிட் டெஸ்ட்தான். யார் வென்றாலும் தோற்றவர்களின் நிலை பரிதாப நிலைதான்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் ஓரணியில் நின்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துள்ளனர். ஸ்டாலின் கூட்டணி பலத்தோடு சந்தித்துள்ளார், தினகரன் தன் சுயபலத்தை நம்பி குதித்துள்ளார். அத்தனை பேருக்குமே இது ஆசிட் டெஸ்ட்தான்.
நடக்குமா? நடக்காதா என்று ஜோசியம் கேட்ட ஆர்.கே நகர் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி ஒருவழியாக வாக்குபதிவு நடத்தி முடித்து விட்டது தேர்தல் ஆணையம்.
வரலாறு காணாத எதிர்பார்ப்பு நிலவிய இந்த தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்காளர்கள் ஆர்வம்
வாக்குபதிவு நாள் அன்று சீக்கிரம் மிசினை ஓபன் பண்ணுங்க... என்று வாக்குச்சாவடி வாசலில் காத்திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். 258 வாக்கு சாவடி மையங்களில் 84 மையங்களில் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இத்தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திமுகவின் நம்பிக்கை
அதிமுக இரண்டாகப் பிளந்து கிடக்கும் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று திமுக தலைமை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. எனவே கூட்டணி பலத்தை களமிறங்கியது திமுக.

2ஜி தீர்ப்பு தந்த நம்பிக்கை
தேர்தல் அன்று காலையிலேயே 2ஜி தீர்ப்பில் திமுகவுக்கு வெற்றி என்ற தீர்ப்பு கிடைத்துவிட்டதால் பிற்பகலுக்கு மேல் பதிவான வாக்குகள் தங்களுக்கு சாதகமாகவே விழுந்திருக்கும் என்று நம்புகிறார் திமுகவின் வேட்பாளர் மருது கணேஷ். இந்த தேர்தல் ஸ்டாலின் செயல்தலைவராக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது அவருக்கு ஆசிட் டெஸ்ட்தான்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஆர்.கே.நகரில் வென்றே ஆக வேண்டும் என்று தங்களின் அத்தனை பலங்களையும் பிரயோகித்துள்ளனர் ஆளுங்கட்சியினர். ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு இது மானப்பிரச்சினை. அதற்காகவே வாக்காளர்களை கவர என்னென்ன செய்ய வேண்டுமே அத்தனை வித்தைகளையும் இறக்கியுள்ளனர். இது ஆளுங்கட்சிக்கு ஆசிட் டெஸ்ட்தான். அதுவும் தினகரன் ஜெயித்து விட்டால் அதைவிட அவமானம் வேறு எதுவுமே வேண்டாம்.

நம்பும் தினகரன்
ஆளுங்கட்சியின் பலம், எதிர்கட்சியின் எதிர்ப்பு என இரண்டையும் சமாளித்து 'வைட்டமின் ப' பலத்தில் களமிறங்கியுள்ளார். வாக்காளர்களை நன்கு கவனித்து குக்கரில் குத்த வைத்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கையுடனே கூறி வருகின்றனர். இந்த தேர்தலில் ஜெயித்தால் சட்டசபைக்கு போவார் தினகரன், தோற்றால் மன்னார்குடிக்கு பெட்டியை கட்ட வேண்டியதுதான். அவரவர் மனதில் ஆயிரம் ஆசைகள் கனவுகள் இருந்தாலும் ஆர்.கே. நகர் மக்கள் மனதில் என்ன இருந்தது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications