எத்தனை கட்சிகளின் தலைமை அலுவலகத்தில் மழை பாதிப்புக்குள்ளான ஜனங்களை தங்க வைத்தார்கள்?
சென்னை: ஒவ்வொரு பெருமழைக்காலத்தின்போதும் லபோ திபோ என்று மக்கள் பரிதவிப்பதும், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் வேட்டி, பேன்ட்டை மடித்துக் கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கி சீன் போடுவதும் தொடர்ந்தபடிதான் உள்ளது.. அப்பாவி மக்களுக்கு இதுவரை நிரந்தர விமோச்சனம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை.
மழை வருடா வருடம் பெய்து கொண்டுதான் உள்ளது. ஊரெல்லாம் வெள்ளம் ஓடிக் கொண்டுதான் உள்ளது. மக்கள் மூழ்கிக் கொண்டுதான் உள்ளனர். பொருள் இழப்பு ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. ஆனால் நிவாரணம்தான் ஒருபோதும் கண்ணில் பட்டதே இல்லை.
தற்காலிக நிவாரணத்தை மட்டும் காட்டி விட்டு மழைக்காலப் பாதிப்பையே "ம.." போச்சுன்னு துடைத்துப் போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் உரியவர்கள். மக்கள்தான் ஒவ்வொரு வருடமும் அவதிப்படுகிறார்கள்.
ரேஷன் கார்டும், நிவாரண நிதியும்
மழையெல்லாம் முடிந்ததும் நிவாரண நிதி வழங்கும் படலத்தைத் தொடங்குவார்கள். ரேஷன் கார்டுக்கு இத்தனை என்று சொல்லி கடைகளில் வழங்குவார்கள். அதை வாங்க பாவப்பட்ட ஜனங்கள் அடித்துப் பிடித்து ஓடுவார்கள். அதில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது தமிழகம்.
கவலையே கிடையாது
வெள்ளம் வரும் வரைக்கும் அரசுத் தரப்பும், பிற கட்சிகளும் கவலையேப் பட மாட்டார்கள். ஏன் கண்டு கொள்ளவே மாட்டார்கள், நாடி நரம்பு புடைக்க முழங்கவும் மாட்டார்கள்.
சாப்பாடு மட்டும் போதுமா
வெள்ளம் வந்தததும்தான் அத்தனை பேருக்கும் விழிப்பு வரும். உடனே ஓடி வருவார்கள்.. அப்போதும் கூட முதலில் ஓடி வருவது எதிர்த் தரப்பு அரசியல்வாதிகள்தான். ஆளுங்கட்சிக்காரர்கள் எருமை மாடு போல அசமஞ்சமாகத்தான் இருப்பார்கள். இலவசமாக சாப்பாடு தருவார்கள், பள்ளிகளில் தங்க வைப்பார்கள். அது மட்டும் போதுமா மக்களுக்கு?
எத்தனை அரசியல் கட்சிகளின் அலுவலகத்தில் இடம் கொடுத்தார்கள்?
இப்போது இப்படி ஒரு பெரு வெள்ளம் வந்ததே.. எந்தக் கட்சியாவது தனது தலைமை அலுவலகத்தில் வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்க இடம் கொடுத்ததா. .மாட மாளிகையும், கூட கோபுரமுமாக உள்ளதே கட்சி அலுவலகங்கள். எங்காவது மக்கள் தங்க இடம் கொடுத்தார்களா.. இல்லை!
என்ன செய்ய வேண்டும்?
வருடா வருடா இப்படி வெள்ளத்தால் நகரம் பாதிக்கப்படுகிறதே, மக்கள் கஷ்டப்படுகிறார்களே. அவர்களுக்காக எதையுமே செய்ததில்லை. இதையாவது செய்வோமே என்று எந்த ஆட்சியாவது, எந்தக் கட்சியவாவது நினைத்துள்ளதா.. இல்லையே.
மழை நீர் வடிகால் உள்ளதா
சென்னையில் மழை நீர் வடிகால் முறையாக இல்லை, முழுமையாக இல்லை. இருக்கும் வசதிகளும் கூட அடைத்துக் கிடக்கிறது. இதனால்தான் மழை நீர் சரியாக போக முடியாமல் வீதிகளிலும், சாலைகளிலும், வீடுகளிலும் புகுந்து விட்டது.
ஏரி - குளங்கள் பாதுகாப்பாக உள்ளதா
ஒவ்வொரு மழைக்காலத்திற்கு முன்பும், ஏரிகளும், குளங்களும் பாதுகாப்பாக உள்ளதா, சரியாக தூர் வாரப்பட்டுள்ளதா, கரைகள் பலமாக உள்ளது, அதன் போக்குக் கால்வாய்கள் ஆக்கரமிப்புகள் இன்றி, சுத்தமாக உள்ளதா என்று எந்த ஆட்சியாவது பார்த்துள்ளதா, கவலைப்பட்டுள்ளதா.. ஆக்கிரமிப்பு இருந்தால் பாரபட்சமின்றி அகற்றியுள்ளர்களா.. இல்லையே!
சிந்தனையே இல்லாத கட்சிகள், அரசுகள்
காமராஜர் ஆட்சிக்குப் பிறகு வந்த எந்த ஆட்சியுமே (அண்ணாவின் ஆட்சிக்காலம் மிகக் குறுகியது.. இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது செய்திருப்பார்) சென்னை மழை வெள்ளக் கொடுமைகளுக்கு நிரந்தரமாக முற்றுப் புள்ளி வைக்க முயன்றதாகவோ, செய்ததாகவோ தெரியவில்லை.
மக்களும் திருந்த வேண்டும்
மக்களும் நிறையவே திருந்த வேண்டும். அரசியல்வாதிகள் போல அவர்கள் பொறுப்பில்லாமல் இருக்கக் கூடாது. ஏரி, குளங்களை ஆக்கிரமிக்கக் கூடாது. இப்படி ஆக்கிரமிப்பவர்களுக்கு அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளும், ஆட்சிகளும் ஆதரவு தரக் கூடாது. ஏரி, குளங்களைப் பாதுகாக்கவும், நீர் நிலைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் மக்கள்தான் முதலில் களத்தில் நிற்க வேண்டும். காரணம், பாதிப்பு வந்தால் முதலில் சிக்கி சின்னாபின்னமாவது மக்கள்தானே தவிர "போயஸ் கார்டனோ, கோபாலபுரமோ" இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.