சென்னையில் மீண்டும் கனமழை... விடிய விடிய சாரல் மழை: இரவில் மீட்புப் பணி முடங்கியது!
சென்னை: சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை தொடங்கி 40 மணிநேரம் விடாமல் கொட்டிய மழையின் பாதிப்பே பல லட்சம் மக்களின் வாழ்க்கையை முடக்கிப்போட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தாம்பரம் மற்றும் மதுராந்தகம் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று மாலையில் பெய்த கனமழையால் வெள்ளம் வடிந்த ஒரு சில பகுதிகளில் மீண்டும் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்க மீட்புப்பணிகள், உணவுப்பொட்டங்கள் வழங்குவதிலும் தொய்வு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகள் பேரிடர் பகுதியாக அறிவிக்கும் நிலைக்கு சென்றது. சென்னை மாநகர் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட கோடி மாவட்டங்களுக்கு கனமழை ஆபத்து நீங்கியதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
ஆபத்து நீங்கியது
இது செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தின் அனேக இடங்களிலும், உள்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
டெல்டாவில் மழை
கனமழையை பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட வடகோடி மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு அல்லை. மத்திய மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, காரைக்கால்லில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யலாம் என்றார்.
தென் மாவட்டங்களில் மழை
தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில புகுதிகளில் மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவித்தார்.
மீண்டும் மழை
ரமணன் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, சென்னையில் மீண்டும் கனமழை கொட்டியது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். விடிய விடிய சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டியதால் சாலைகளில் மீண்டும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Rain resumes in several parts of Chennai (Visuals from Royapettah) pic.twitter.com/uGKJpWcJNr
— ANI (@ANI_news) December 4, 2015
பீதியில் வெளியேறிய மக்கள்
இதனிடையே கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததாக வந்த வதந்தி பரவியதை அடுத்து சென்னை ஜாபர்க்கான்பேட்டையில் இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி வலுவாக இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
முழுவீச்சில் மீட்புபணிகள்
சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் நேற்று மேலும் 20 தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் படையின் தலைமை இயக்குநர் ஓ.பி. சிங் கூறியுள்ளார்.
போலீஸ் எச்சரிக்கை
சென்னையில் பலத்த மழை தொடர்ந்தால் மீண்டும் ஏரிகளில் இருந்து நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே,தாம்பரம், முடிச்சூர் மக்கள் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.