"பாகுபலி"யைப் பாக்க முடியுமான்னு தெரியலையே...!
சென்னை: தீபாவளியை ஒட்டி அனைத்து சேனல்களிலும் போட்டி போட்டுக் கொண்டு நாளை புதிய படங்களை ஒளிபரப்ப உள்ளன. ஆனால், மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லை. இதே நிலை நாளையும் நீடித்தால், "மொட்ட சிவா கெட்ட சிவா"வையும் பார்க்க முடியாது, "சிவலிங்கத்தை"த் தூக்கிக் கொண்டு போகும் பாகுபலியையும் தரிசிக்க முடியாது.
தீபாவளிப் பண்டிகை வந்தாலே புதுப்படங்கள் ரிலீசாவதும் வழக்கம். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது புதுப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
ஆனால், அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொலைக்காட்சிகளில் ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புதிய படங்களைக் கூட ஒளிபரப்பு செய்து விடுகின்றனர்.
சில சமயங்களில் வெள்ளித் திரையில் ரிலீசாகாத சில படங்கள் கூட நேரடியாக சின்னத்திரையில் ரிலீஸாகி விடும்.
பாகுபலி...
இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகையையொட்டி சன் டிவியில் காஞ்சனாவும், விஜய் டிவியில் மாரியும் ஒளிபரப்பபடுகின்றன. ஜெயா டிவியில் வசூலில் சாதனை புரிந்த பாகுபலி ஒளிபரப்பப்படுகிறது.
தமிழில்...
ஏற்கனவே கேரளாவில் ஒரு சேனல், இந்தியில் பாகுபலியை ஒளிபரப்பியே பெரும் வசூலும் பிரபலமும் அடைந்தது. இந்நிலையில் தமிழில் பாகுபலி ஒளிபரப்பப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மின்தடை...
ஆனால், மழை காரணமாக இன்று சென்னையின் பல இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை நாளையும் இதே போல் மழையால் மின் தடை ஏற்பட்டால் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் எதையும் பார்க்க முடியாதே என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சிறப்பு நிகழ்ச்சிகள்...
மழை காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் பாவம் தான்.
சூடா வடை சுட்டு சாப்பிட்டு குடும்பத்தோடு பேசிட்டிருக்க வேண்டியதுதான்.. வேற வழி!