கருணாநிதி தந்த பாடலுக்கு ஜெ.வே எழுந்து நிற்கிறார்.. இது போதும் -ராசா 'பலே' பேச்சு!
திருச்சி: தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று தமிழ்நாட்டின் முதல்வர் கேட்கிறார். அரசு நிகழ்ச்சிக்கு முதல்வர் போகிறபோதெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து சொன்னதும் அவருடைய கணத்த சரீரம் எழுந்து நிற்கிறது. நீராருங் கடலுடுத்த என்ற பாடலைப்போடுகிறார்கள். அந்தப்பாடலை இந்த மண்ணிற்கு தந்த தலைவன் என்னுடைய தலைவன் கலைஞர் என்பதை மறக்கவேண்டாம். எழுந்து நிற்கிற போதெல்லாம் தமிழுக்கு மட்டுமல்ல; என்னுடைய தலைவனுக்கும் வணக்கம் சொல்லுகிறது என்று பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராசா.
திமுக மாநில மாநாட்டின் 2வது நாளான இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசினார். திராவிடம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது...
தமிழின் ஒட்டுமொத்த வரலாற்றில் இரண்டாக பிரிக்கவேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஒன்று சங்கம் வளர்த்த தமிழ். இரண்டாவது திராவிடம் வளர்த்த தமிழ்.
சங்கம் வளர்த்த தமிழுக்கும் திராவிடம் வளர்த்த தமிழுக்கும் இடையில் எங்கோ மோதல்; முரன்பாடு. அந்த முரன்பாட்டையும், மோதலையும் தீர்த்து வைத்த இயக்கம் திராவிட இயக்கம் என்ற காரணத்தினாலேதான் திராவிடம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பை இந்த மாநாட்டிலே பயன்படுத்தியிருக்கிறோம்.
4500 ஆண்டுகளுக்கு முன்னால் 450 புலவர்கள் கூடி முதல் தமிழ்ச்சங்கத்தை கண்டார்கள். அந்த முதல் தமிழ்ச்சங்கத்தில் காணப்பட்ட பல்லாயிரம் நூல்களில் முதுநாரை,முதுகுறுகு என்ற இரண்டு நூல்களை தவிர எல்லா நூல்களூம் நமக்கு கிடைக்கவில்லை.
அதற்கு பிறகு, 3500ஆண்டுகளூக்கு முன்னால் வெண்டேசெழியன் இரண்டாவது தமிழ்சங்கத்தை கண்டான். அவனுடைய காலத்திலே கூட தொல்காப்பியம், இசை நுணுக்கம் இரண்டுநூல்களைத்தவிர எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. மீண்டும் ஒன்று, இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் முதல் தமிழ்ச்சங்கம் துவங்கியது.
அந்த தமிழ்சங்கத்திலேதான் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கணக்கு நூல்கள் எல்லாம் நமக்கு கிடைத்தன. அந்த நூல்கள் கூட, கரையான் தின்றது போக, கடல் தின்றது போக உ.வே.சாமிநாத சர்மா அய்யர் தேடிக்கொடுத்த, தொகுத்துக்கொடுத்த நூல்கள்.
எஞ்சியுள்ள நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்கண்க்கு. அதிலே தமிழர்களின் வரலாறு பொதிந்து கிடக்கிறது. இந்த உலகத்திற்கு செய்தி பொதிந்து கிடக்கிறது. அதற்கு பின்னால் தமிழுக்கு இருண்ட காலம் என்று சொல்லமாட்டேன். ஒரு ஊடுறுவல் காலம்.
மொழிபடையெடுப்பு என்பதைக்காட்டிலும் மொழி கலப்பு என்பதை சொல்லுவதைக் காட்டிலும்,ஒரு 20 ஆண்டுகாலம் இந்த மண்ணில் சேதாரங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு பிறகுதான் திராவிடம் வளர்த்த வளர்ச்சியை காணமுடியும்.
எத்தனை எத்தனையோ படையெடுப்புகளூக்கு பிறகும், சிறிது சுணக்கம் ஏற்பட்டதே தவிர, சிறிது இடைஞ்சல் ஏற்பட்டதே தவிர, தமிழ் எப்பொழுதும் தனது இடத்தை இத்தனை இடத்தை பார்த்த ஒரு மொழி என்று சொன்னால், தாங்கிய ஒரு மொழி என்று சொன்னால் அது தமிழ்மொழிதான்.
தமிழுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் கேட்கிறார். முதலமைச்சர் அவர்களே, எல்லா அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் போகிறீர்கள் பரவாயில்லை. அரசு நிகழ்ச்சிக்கு போகிறபோதெல்லாம் உங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் வருகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து சொன்னது ம் உங்களுடைய கணத்த சரீரம் எழுந்து நிற்கிறது. நீராருங் கடலுடுத்த என்ற பாடலைப் போடுகிறார்கள்.
அந்தப்பாடலை இந்த மண்ணிற்கு தந்த தலைவன் என்னுடைய தலைவன் கலைஞர் என்பதை மறக்கவேண்டாம். எழுந்து நிற்கிற போதெல்லாம் தமிழுக்கு மட்டுமல்ல; என்னுடைய தலைவனுக்கும் வணக்கம் சொல்லுகிறது என்றார் அவர்.