ரஜினி அரசியலில் ஈடுபட அவருக்கு முழு உரிமை உண்டு.. திருமாவளவன் அதிரடி!
ரஜினிகாந்த் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் பொது வாழ்க்கை , மற்றும் அரசியலில் ஈடுபட அவருக்கு சுதந்திர உரிமை உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தென்காசி: ரஜினிகாந்த் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் பொது வாழ்க்கை, மற்றும் அரசியலில் ஈடுபட அவருக்கு சுதந்திர உரிமை உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மத்திய அரசிடமிருந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடுவதே தமிழக அரசின் இன்றைய நிலைப்பாடாக உள்ளது என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'அதிமுக அரசு படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று புதிதாக கிராமங்களில் மதுகடைகளை திறக்க முயற்சி செய்கிறது.
இதற்கு எதிராக தமிழகத்தில் பெண்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மீதும் குழந்தைகள் மீது காவல்துறையினர் மூர்க்கமாக தாக்கி அடக்கு முறையை கையாண்டு மக்கள் விரோத நடவடிக்கையில் அதிமுக அரசு ஈடுபட்டு வருகின்றது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பள்ளிக்கல்வித்துறைக்கு வரவேற்பு
பள்ளி கல்வி துறை சார்பில் பொதுத் தேர்வு முறையில் தமிழக அரசு மாற்றங்கள் கொண்டு வருவதையும், 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது, 200 மதிப்பெண்ணை 100 ஆக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. ஆனால் பாட திட்டம், பள்ளியின் கட்டமைப்பு, ஆசிரியர் திறன் மேம்படுத்துதல், விடுதிகளின் தரம் மேம்படுத்தபடுவதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆதிதிராவிட நல் பள்ளிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
செயலற்ற ஆட்சி நிர்வாகம்
ஆட்சி நிர்வாகம் செயல் இழந்து கிடப்பதால் தமிழகத்தில் மதுக்கடைகளுக்கும், குடி தண்ணீருக்கும் பெண்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படுவதுண்டு. அதற்கு மத்தியமாநில அரசுகள் இணைந்து வறட்சியை சரி செய்ய முன்வர வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வறட்சி நிவாரணத்தை வழங்க முன் வரவேண்டும்.
வறட்சி நிவாரணம் - கண்டனம்
ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது 39,500 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் தேவை என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17000 கோடியாவது வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் மத்திய அரசு இதனை வழங்க முன் வரவில்லை. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஆட்சியை தக்கவைக்க போராட்டம்
நீட் தேர்வு முறையால் தேசிய அளவில் தமிழக கிராம புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வு முறையில் தமிழகத்திற்கு விதிமுறை தளர்வை அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. கல்வி அதிகாரத்தை மாநில அரசு கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மாநில அரசு கட்டுப்பாடு விதிக்க கூடாது.
மத்திய அரசிடமிருந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடுவதே தமிழக அரசின் இன்றைய நிலைப்பாடாக உள்ளது.
ரஜினிக்கு சுதந்திர உரிமை உண்டு
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளை மையபடுத்தி மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாட்டில் தலையிட்டு மடக்கி வருகிறது, நண்பர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போகிறார் என்பதை அவர் தனது ரசிகர்களிடம் பேசிய பேச்சிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ரஜினிகாந்த் இந்திய நாட்டின் குடிமகன் என்ற முறையில் பொது வாழ்க்கை , மற்றும்அரசியலில் ஈடுபட அவருக்கு சுதந்திர உரிமை உண்டு. அதில் தலையிட நான் விரும்பவில்லை.
தனித்தன்மையை விடக்கூடாது
பிஜேபி போன்ற வகுப்பு வாத கட்சிகளுடன் உறவு வைத்துள்ளார் என்பதும் அவர் பிஜேபி கட்சியில் இணைய உள்ளதாகவும் பலர் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிஜேபி கட்சியை சேர்ந்த அமித் ஷா ரஜினிகாந்த்க்காக கட்சியின் கதவு திறந்தே வைத்திருப்பதாக கூறுகிறார். ரஜினிகாந்த் தனது தனித்தன்மையை விட்டு கொடுக்க கூடாது'. இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.