ரஜினி வெகுளி... அரசியலுக்கு சரிப்பட மாட்டார்... சொல்வது ராஜேந்திர பாலாஜி
ரஜினி வெகுளி என்பதால் அவர் அரசியலுக்கு சரிப்படமாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ரஜினி வெகுளி என்பதால் அவர் அரசியலுக்கு சரிப்பட மாட்டார் என்றும் அவரது வயதிற்கும், குணத்திற்கும் அரசியல் சாத்தியப்படாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ரஜினிகாந்த இரண்டாவது முறையாக ரசிகர்களை தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், வரும் 31-ஆம் தேதி அரசியலில் தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது நான் எம்ஜிஆருக்கு அடுத்து ரஜினியின் ரசிகன். அவர் கட்சி ஆரம்பித்து கொள்கைகளை கூறட்டும் பிறகு நான் கருத்து கூறுகிறேன் என்றார். அமைச்சர் ஓ.எஸ். மணியனோ ரஜினி தனது உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைபட்டியில் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ரஜினி ஒரு வெகுளி. அவரது குணமும், வயதும் அரசியலுக்கு சரிப்பட்டு வராது.
அரசியலுக்கு வர சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும் என்றார் ராஜேந்திர பாலாஜி.