ரஜினி மகள் சௌந்தர்யா விவாகரத்து வழக்கு: ஜூலை 4ல் இறுதித் தீர்ப்பு!
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா அஸ்வின் விவாகரத்து வழக்கில் ஜூலை 4ம் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா - அஸ்வின் விவகாரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஜூலை 4ம் தேதி இறுதித் தீர்ப்பு அளிக்கிறது.
கடந்த 2010ம் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்று 2 வயதில் ஒரு மகனும் உள்ளான். குழந்தை பிறந்த ஓராண்டில் சௌந்தர்யா கணவரைப் பிரிந்து தனது தாய், தந்தையருடன் வசித்து வந்ததாகத் தகவல்கள் பரவின.
தங்களுக்குள் மனக்கசப்புணர்வு ஏற்பட்டதால் விவாகரத்து பெறப்போவதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனையடுத்து குடும்ப பிரச்னை மற்றும் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
சமாதானப் பேச்சுகள்
ரஜினிகாந்த் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் இருவரையும் சேர்த்து வைக்க முடியவில்லை. இதே போன்று ரஜினி குடும்பத்து நண்பர்களும், நெருங்கிய சினிமா பிரபலங்களும் சௌந்தர்யா, அஸ்வினுடன் சமாதானப் பேச்சு நடத்தினர்.
6 மாத அவகாசம்
சமாதானம் ஆகாத சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணைக்காக இருவரும் ஆஜரான நிலையில் இருவரும் சமரசம் பேச 6 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
ஜூலை 4ல் இறுதித் தீர்ப்பு
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது அஸ்வினும், சௌந்தர்யாவும் மனமொத்து பிரிவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு மீதான இறுதித் தீர்ப்பை சென்னை குடும்பநல நீதிமன்றம் ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
விஐபி 2 இயக்குனர்
வெளிநாட்டில் அனிமேஷன் படித்த சௌந்தர்யா சென்னையில் ஆக்கர் அனிமேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சினிமா படங்களுக்கு அனிமேஷன் செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்த இவரது நிறுவனம் கோவா படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியது. கோச்சடையான் படத்தை இயக்கிய சௌந்தர்யா தற்போது தனுஷை வைத்து விஐபி 2 என்ற படத்தை இயக்கி வருகிறார்.