ரசிகர்களின் அரசியல் ஆசையை கலைத்த ரஜினி பேச்சு!
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், நாளை தனது அரசியல் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று ரஜினி 5வது நாளாக சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார்.
ரசிகர் சந்திப்பின்போது அவர் பேசிய சில சூசக பேச்சுக்கள் ரசிகர்கள் வயிற்றை கலக்குவதாக உள்ளது.
தங்கள் தலைவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ரஜினியின் இன்றைய பேச்சு ஏமாற்றம் தருவதாக உள்ளது. நாளை அரசியல் அறிவிப்பு என கூறியுள்ள நிலையில், இன்று அதற்கான எந்த அறிகுறியும் ரஜினி பேச்சில் இல்லை.

இரு தகவல்கள்
இன்னும் சொல்லப்போனால் அரசியல் கனவை கலைப்பது போலத்தான் ரஜினி பேச்சு இருந்தது. இதை உறுதி செய்ய அவரது இரு பேச்சுக்களை மேற்கோள் காட்ட முடியும். ஒன்று கனவு பற்றியது, இன்னொன்று காலா பற்றியது.

கனவு மட்டுமே காண வேண்டியதுதான்
ரஜினி பேசுகையில், கனவு காணும்போது இருக்கும் சந்தோஷம் அது நனவாகும்போது இருக்காது என்றார். ரஜினி அரசியலுக்கு வருவார் என கனவு காணும் ரசிகர்களுக்கு, இது ஒரு சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. அரசியல் கனவு நனவானால் அது சந்தோஷமாக இருக்காது என்பதைத்தான் அவர் இவ்வாறு கூறுகிறாரா? அப்படியானால் எப்போதுமே கனவு கண்டுகொண்டு மகிழ்ச்சியாக இருங்கள் என சொல்ல வருகிறாரா?

ஆண்டவன் இன்னும் சொல்லலியா?
இதே பேச்சின் ஒரு கட்டத்தில், காலா பற்றி ஒரு தகவல் சொன்னார். 2.0 மற்றும் காலா படங்களுக்கு பிறகு, ஆண்டவன் என்ன சொல்கிறானோ பார்ப்போம் என்றார் ரஜினி. அப்போதே, "என்னது ஆண்டவன் இன்னும் சொல்லலியா" என்ற ஒரு சத்தம் ரசிகர் கூட்டத்தில் இருந்து வந்து மேடையில் எதிரொலித்தது. நாளை அரசியல் அறிவிப்பு என கூறிய நிலையில், இப்போது அடுத்த ஆண்டு மத்தியில் வெளிவர உள்ள படங்களுக்கு பிறகே ஆண்டவன் சொல்வதை பார்ப்போம் என கூறியுள்ளார் ரஜினி.

சத்திய சோதனை
இதுபோன்ற ரஜினி பேச்சுக்களால், கடும் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள். விவேக் ஒரு திரைப்படத்தில் கூறுவதை போல ரைட்டில் கையை போட்டுவிட்டு, லெப்ட்டில் இன்டிகேட்டர் போட்டுவிட்டு நேராக போய் குழப்பும் டெக்னிக்கா இது? அல்லது எல்லோரையும் குழப்பிவிட்டு நாளையே அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா? ரஜினிய இன்னும் ஒருநாள்தானே, வெய்ட் அன்டு வாட்ச்.












Click it and Unblock the Notifications