நயன்தாரா, அஸ்வினைத் தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்கும் ரஜினி
சென்னை: நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்க, நடிகர் ரஜினிகாந்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே நயன்தாரா, அஸ்வின் ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக ரஜினியும் இந்த விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார்
சட்டமன்றத் தேர்தல்
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. இதற்காக சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவிலான விளம்பரங்களை ஏற்கனவே, தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
விழிப்புணர்வு படங்கள்
அடுத்ததாக விழிப்புணர்வு தொடர்பான படக்காட்சிகளை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த விழிப்புணர்வுப் படங்களில் தமிழ்நாட்டின் பிரபல நட்சத்திரங்கள் தற்போது நடித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த்
விழிப்புணர்வு படங்கள் மற்றும் விளம்பரங்கள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சமீபத்திய பேட்டியில் " தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படக்காட்சிகள் வெளிவரவுள்ளன. நடிகை நயன்தாரா நடித்துள்ள விழிப்புணர்வு படம் விரைவில் வெளியாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமும் விழிப்புணர்வு படம் நடிக்க அழைப்பு விடுத்துள்ளோம். கிரிக்கெட் வீரர் அஸ்வின் இலவசமாக நடித்தார்.
30 லட்சம்
விழிப்புணர்வு விளம்பர வீடியோ படப்பிடிப்புக்காக ரூ.10 லட்சம், சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக ரூ.10 லட்சம், எப்.எம். ரேடியோ மூலம் ஒலிபரப்புவதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளோம்" என்று தெரிவித்திருக்கிறார்.