கட்சிக் கொடி தயாரிக்கும் பணி நடக்கிறது...நிச்சயம் உங்களை சந்திப்பேன்... பத்திரிகையாளர்களிடம் ரஜினி
கட்சிக் கொடி தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் தனது கட்சிக்கான கொடி தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளார். அதை அறிமுகப்படுத்தும்போது செய்தியாளர்களை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 31-ஆம் தேதி ரசிகர்களிடையே பேசுகையில் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் பேசிய ஆன்மிக அரசியல் என்பது பெரும் சர்ச்சையாகி விவாத பொருளாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் ரஜினி கட்சி பெயர் உள்ளிட்ட அறிவிப்புகள் வரும் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகும் என்று கூறப்பட்டது. மேலும் மக்களை ஒருங்கிணைக்க ரஜினி ஒரு மன்றத்தை இணையதளத்தில் தொடங்கியுள்ளார்.
அதில் பாபா முத்திரை இருந்தது. எனவே இதுதான் கட்சியின் கொடி என தகவல்கள் வைரலாகின. இந்நிலையில் ரஜினி இன்று ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் பெங்களூரில் ஒரு பத்திரிகையில் ப்ரூப் ரீடராக பணியாற்றியுள்ளேன். அதனால்தான் பத்திரிகையாளர்களை நான் அவாய்ட் செய்வதில்லை. இருந்தாலும் ஒருவருக்கு பேட்டி கொடுத்து மற்றொருவருக்கு பேட்டி கொடுக்காவிட்டால் அது தவறாகிவிடும். எல்லாரும் நண்பர்கள்தானே.
அதனால்தான் இன்று உங்களை சந்தித்துள்ளேன். தமிழகத்தில் சரியில்லாத சிஸ்டத்தை மாற்ற சுதந்திர போராட்டம் போல் மற்றொரு புரட்சி நடக்க வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதுபோல் நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்.
கட்சி கொடி தற்போது தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை அறிமுகப்படுத்தும்போது நிச்சயம் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என்றார் ரஜினி.