ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போர்........ மவுனம் கலைவரா ரஜினிகாந்த்?
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் புரட்சி குறித்து ரஜினிகாந்த் மவுனத்தை கலைப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஆனால் அரசியல்வாதியாகப் போகிறேன் என சொல்லுகிற ரஜினிகாந்த் இதை பற்றி பேசாமல் மவுனமாகத்தான் இருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் கொள்கை என்ன என்று கேட்டதாலேயே தலை சுத்திடுச்சு என்று சொன்னவர் ரஜினிகாந்த். ஆனால் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் இமயமலைக்கு ஓய்வு எடுக்க சென்றார் ரஜினிகாந்த். அப்போது தாம் அரசியல் பேசவிரும்பவில்லை என்றார். பாஜக தலைவர்களை மட்டும் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
இமயமலை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய போதும், அன்றாட பிரச்சனைக்கு எல்லாம் நான் கருத்து சொல்ல முடியாதுன்னு எத்தனை தடவை சொல்றது? என்று கடிந்து கொண்டார். ஆனாலும் அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கிறாராம் ரஜினிகாந்த்.
இதேநேரத்தில்தான் தூத்துக்குடியில் புதிய போர்க்களம் திறக்கப்பட்டுள்ளது. ஆம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போர் புரியத் தொடங்கிவிட்டனர். ஜல்லிக்கட்டுப் புரட்சியை மிஞ்சிய ஒரு போராட்டமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு களம் இருக்கிறது.
ஆனால் போர் வரும்.. அழைக்கிறேன் என்று சொன்ன ரஜினிகாந்த் இந்த மக்களின் போருக்கு மதிப்பளித்து மவுனம் கலைக்கலாமே.. இதெல்லாம் அன்றாட பிரச்சனை என ஒதுங்கிடுவாரோ?