ரஜினி அரசியல் பேச்சு பற்றி ஜி.கே.வாசன் என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதைக் குறித்து 'சரியான முடிவை எடுப்பார்' என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருக்கிறார்.
ஈரோடு: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், 'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைக் குறித்து சரியான முடிவை நிச்சயம் எடுப்பார்' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறுகையில், " உள்ளாட்சித் தேர்தலுக்கு த.மா.கா. தயாராகி வருகிறது. நான் கடந்த 2 மாதமாக 32 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ், வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, த.மா.கா.வின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பி.எஸ். அணியுடன் கூட்டணி தொடரும். அ.தி.மு.க. கூட்டுக் குடும்பமாக இருப்பதை த.மா.கா. விரும்புகிறது.
மத்திய அரசு கிராமப்புற மக்களுக்கு துணை நிற்கவில்லை. விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வறட்சியினால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் விவசாய கடன்களுக்காக நெருக்கப்படுகிறார்கள். எனவே அவர்களது அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் வாசனிடம் 'ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி உங்கள் கருத்து என்ன' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜி.கே.வாசன், ''ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். ரஜினிகாந்த் மக்கள் மன நிலையை நன்கு புரிந்தவர். எனவே அவர் சரியான முடிவை எடுப்பார்'' என்று கூறினார்.
ரஜினி இன்று கூறிய அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஜி.கே.வாசன் பெயர் இல்லாத நிலையில், வாசன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பதிலளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.