சென்னை: காங்கிரஸ் பிரமுகர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளசரவாக்கம் ஆற்காடு சாலை கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகில் காங்கிரஸ் முன்னாள் நகராட்சி தலைவர் இ.சி.சேகர் அலுவலகம் உள்ளது.
இங்கு வியாழக்கிழமை இரவு ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது. இதில் அலுவலக கதவில் விழுந்து பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. பாட்டில் வெடித்த போது அதன் அருகில் உள்ள டீக்கடைக்கு தீ பரவியது.
இ.சி.கேசர் அலுவலகம் மாடியில் பிரியாணி கடை உள்ளது. அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உடனடியாக ஓடிவந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சத்தியமூர்த்தி பவன் முற்றுகை, ராஜீவ் சிலை உடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
போரூரில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
ராஜீவ் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து இ.சி.சேகர் தலைமையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட வளசரவாக்கத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாராவது காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்ற கோணத்தில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.