7 தமிழர் விடுதலை இப்போது ஆளுநர் கையில்.. மறுப்பாரா, ஏற்பாரா?
சென்னை: 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் இப்போது ஆளுநர் கையில்தான் உள்ளது. அனைவர் கவனமும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நோக்கி மாறியுள்ளது.
ஏனெனில், தமிழக அமைச்சரவை இன்று, 7 தமிழர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
"இது மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகிறது. 161வது பிரிவின்கீழ் மாநில அரசு பரிந்துரை செய்ததை ஆளுநர் ஏற்றுதான் ஆக வேண்டும். ஆளுநர் என்பவர் தமிழக அரசின் பிரதிநிதி. எனவே தமிழக அரசின் ஆணையை, அவர் ஏற்றுதான் ஆக வேண்டும்" என்று உறுதியாக தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை கூடியுள்ளது என்பதை வைத்தே நாங்கள் எந்த அளவுக்கு இதில் அக்கறை காட்டுகிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். அமைச்சரவை தீர்மானம் உடனடியாக இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதையடுத்து தீர்மானம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் எப்போது வேண்டுமானாலும், ஆளுநர் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட கூடும் என்று தெரிகிறது. எனவே இப்போது ஆளுநர் மீது அனைவர் கவனமும் சென்றுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில், காங்கிரஸ் கட்சி தலைமையே, அமைதியாக உள்ளது. எனவே, மத்திய அரசு, தமிழக அரசின் இந்த முடிவிற்கு எதிராக செயல்பட கூடாது என்றே ஆளுநருக்கு பரிந்துரைக்கும் என தெரிகிறது.
எனவே 7 தமிழர் விடுதலை என்பது ஏறத்தாழ நிச்சயமாகியுள்ளது.