ராமநாதபுரம், வேடசந்தூர் சென்டிமெண்ட் மீண்டும் நிரூபணம்.... பழனி, குமரி சென்டிமெண்ட் போச்சு!
சென்னை: சட்டசபை தேர்தலோ, லோக்சபா தேர்தலோ ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வெல்லும் கட்சிதான் மத்தியிலோ, மாநிலத்திலோ ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இது ராமநாதபுரம்,கன்னியாகுமரி, பழனி, வேடசந்தூர் ஆகிய தொகுதிகள் இந்த நம்பிக்கை வளையத்திற்குள் வருகின்றன.
ராமநாதபுரத்தில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்பது அரசியல் கட்சித்தலைவர்களின் நம்பிக்கை. இந்த சட்டசபை தேர்தலில் இது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்து முடிந்த எல்லாத் தேர்தல்களிலும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்துள்ளது. பொதுவாக ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்வு செய்யும் எம்.எல்.ஏ எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததே இல்லை. ஆளுங்கட்சியாகத்தான் இருந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் என 4 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 1952,1957,1962 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் மன்னரான ராஜா சண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியைக் கைப்பற்றியது.
திமுக ஆட்சி
1967 இல் தங்கப்பன் திமுக சார்பில் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சி அமைத்தது. 1971 இல் திமுக வேட்பாளர் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். இதன் பின்பு 1977,1980,1984 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமி 3 முறை வெற்றி பெற்றார். இதனையடுத்து திமுக வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
அதிமுக, திமுக மாறி மாறி வெற்றி
இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவனும், 1996 இல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கானும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் வெற்றி பெற்ற அனைத்துக் காலங்களிலும் அந்தந்த கட்சியே ஆட்சி அமைத்தது.
2011ல் அதிமுக ஆட்சி
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.ஹசன்அலி 2006 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது கருணாநிதி முதல்வராக இருந்தார். கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியாக சேர்ந்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெற்றி பெற்ற போது முதல்வராக ஜெயலலிதாவே ஆட்சி அமைத்தார்.
அதிமுக வெற்றி
இந்த தேர்தலில் அதிமுகவின் மருத்துவ அணியின் மாநில துணைச் செயலாளரான டாக்டர்.முரு.மணிகண்டன் 33222 வாக்குகள் வித்தியாசத்தில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போதும் அதிமுகவே ஆட்சி அமைத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்.
நீடிக்கும் நம்பிக்கை
ஒவ்வொரு தேர்தல்களிலும் ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரின் கட்சியோ அல்லது கூட்டணி கட்சியினர் சார்ந்திருக்கும் ஆட்சியோ அமைந்துள்ளது என்ற சென்டிமெண்ட் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இதேபோல வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையும் இம்முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
பழனி தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நம்பப்படுகிறது. 1967ல் பழனி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக முதன் முறையாக தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.
பொய்த்துப்போன நம்பிக்கை
இந்த தேர்தலில் பழனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெ.செந்தில்குமார், அதிமுக வேட்பாளர் குமாரசாமியை விட 26,327 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பழனி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினை பெறும் என்ற நம்பிக்கை இந்த முறை பொய்த்து விட்டது.
குமரி சென்டிமெண்ட் நொறுங்கியது
கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் இதுவரை நிலவி வந்தது. அதேபோல லோக்சபா தேர்தலில் குமரி தொகுதியில் ஜெயிக்கும் கட்சிதான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்பது நம்பிக்கை அது 2014 லோக்சபா தேர்தலில் நிரூபணமானது.
பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார் மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. கன்னியாகுமரி சென்டிமெண்ட் லோக்சபா தேர்தலில் நிரூபிக்கப்பட்டது.
பொய்த்துப்போன நம்பிக்கை
இந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் திமுக எதிர்கட்சி வரிசையில்தான் அமர்ந்துள்ளது. இதன்மூலம் இம்முறை குமரி தொகுதி பற்றிய நம்பிக்கை தகர்ந்துள்ளது.