நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரிக்கை
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும். இலங்கையர்களால் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வேண்டும். இந்திய கடல் எல்லையில் மீன் பிடி தொழிலுக்குப் பாதுகாப்பு தர வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று ராமேஸ்வரத்தில் நடந்த மீ்னவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது எச்சரிக்கப்பட்டது.
ராமேஸ்வரம் மீனவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மீனவ சங்க தலைவர் என்.ஜே. போஸ் தலைமை வகித்தார்.
அப்போது, மீனவர்கள் இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களுக்கு மருத்துவம், உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்திய, இலங்கை மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கவும், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை வரும் பிப்ரவரி 24, 26 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துவரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குறிப்பிட்ட நாள்களில் மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண அரசுகள் முன் வரவில்லையென்றால் 6 மாவட்ட மீனவர்களையும் ஒன்றிணைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் கோஷங்களை எழுப்பினர்.