தமிழ் சினிமாவில் நடிக்க சான்ஸ் தேடிய ராம்குமார்... போலீஸ் விசாரணையில் புது தகவல்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி காலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். பின்னர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராம்குமாரை 3 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 13ம் தேதி மாலை முதல் ராம்குமாரிடம் நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
3 மாதத்தில் எப்படி?
கடந்த இரண்டு நாட்களாக ராம்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. வெறும் 3 மாதங்கள் மட்டுமே சுவாதியுடன் பழகி அவரை கொலை செய்தது எப்படி என்று போலீசார் கேட்டதற்கு, கடந்த வருடமே சில முறை சென்னை வந்து சூளைமேட்டில் தங்கியிருக்கிறேன். அப்போது சுவாதி கோயிலுக்கு வருவதை பார்த்து மையல் கொண்டேன் என்று ராம்குமார் கூறியுள்ளார்.
ஒரு வருஷம் முன்பே
ராம்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் இப்படி விவரித்தார்: கடந்த வருடம் செப்டம்பரில் முதல் முறையாக சூளைமேட்டுக்கு ராம்குமார் வந்துள்ளார். ஏதாவது ஒரு வேலை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் படிப்பை முழுமையாக கூட முடிக்காமல் சென்னை வந்துள்ளார்.
கண்டதும் காதல்
சூளைமேட்டிலுள்ள மேன்சனில் ராம்குமாரின் பக்கத்து ஊர்க்காரர்கள் தங்கியிருந்ததால், அவருக்கும் அங்கேயே ரூம் கிடைப்பது எளிதாக இருந்தது. அதே ஏரியாவிலுள்ள பெருமாள் கோயிலுக்கு, சுவாதி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போதுதான், ராம்குமார் முதல் தடவையாக சுவாதியை பார்த்துள்ளார். முதல் பார்வையிலேயே சுவாதி மீது ராம்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்லது.
தப்பான கண்ணோட்டம்
ராம்குமாரும், பெருமாள் கோயிலுக்கு போவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். மெதுவாக சுவாதியிடம் பேச்சு கொடுத்துள்ளார். நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், சுவாதியும் சகஜமாக பேசியுள்ளார். கிராமத்தில் இருந்து வந்தவர் ராம்குமார் என்பதால், ஒரு பெண் தன்னிடம் பேச்சு கொடுத்ததே காதலின் அறிகுறிதான் என்று தப்பாக முடிவு செய்துவிட்டார்.
காதலை சொல்லி வாங்கிகட்டினார்
சுவாதி தன்னிடம் பேசியதை சக நண்பர்களிடம் கூறி பெருமையடித்துள்ளார். அந்த நண்பர்களும், சுவாதி அழகாக இருக்கிறார். எப்படியாவது அவரை காதலித்து விடு என கூறி தூண்டியுள்ளனர். ஒருநாள், தைரியத்தை வரவழைத்து கொண்டு பெருமாள் கோயிலுக்கு வந்த சுவாதியிடம், காதல் விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராம்குமார். அதிர்ச்சியடைந்த சுவாதி, அவரை திட்டிவிட்டு சென்றுவிட்டார்.
தொல்லை ஆரம்பம்
சுவாதி திட்டியதை ராம்குமாரால் ஜீரணிக்க முடியவில்லை. சுவாதி தன்னை காதலித்து வந்ததாகவும், இப்போதுதான் ஏமாற்றிவிட்டார் என்பதை போலவும் நினைக்க தொடங்கியுள்ளார் ராம்குமார். எனவே, சுவாதி கோயிலுக்கு செல்லும் வழி, ரயில் நிலையம் செல்லும் வழிகளில் மறித்து நின்று காதல் தொல்லை கொடுத்துள்ளார்.
சினிமா மோகம்
சுவாதி வேலை செய்யும் இடம்வரை கூட, பின் தொடர்ந்து சென்று காதலை சொல்லி தொந்தரவு கொடுத்துள்ளார். ராம்குமாருக்கு சினிமா மோகம் அதிகம். தொடர்ந்து ஒரு பெண்ணிடம் காதல் தொல்லை செய்தால் அந்த பெண் திருப்பி காதலிப்பார் என்ற எண்ணத்தை சினிமா காட்சிகள் அவருக்கு வளர்த்துள்ளது.
சினிமா சான்ஸ்
தனது சினிமா மோகத்தால், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்றும் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் ராம்குமார். இந்த தகவலை விசாரணையின்போது தெரிவித்தார். ஆனால் ராம்குமாருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவேதான் வேறு வழியில்லாமல், ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார்.
கண்டித்த மக்கள்
தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்த ராம்குமாரை, அவரது உருவத்தை கேலி செய்து, சுவாதி மிகவும் மோசமாக திட்டியுள்ளார். சூளைமேட்டிலுள்ள இடியாப்பம் விற்பனை ஹோட்டல் ஒன்றின் அருகே இருவருக்கும் அன்று மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக சென்ற சில பொதுமக்கள்தான், ராம்குமாரை கண்டித்து விரட்டியுள்ளனர்.
கொலை செய்ய போகலியாம்
ராம்குமார் தொல்லை அதிகரித்ததால், தனது தந்தையிடம் அவரை சுட்டி காண்பித்துள்ளார் சுவாதி. தந்தையின் துணையோடு, ஸ்கூட்டரில் ரயில் நிலையம் வரத் தொடங்கியுள்ளார். இதை அறிந்து கொண்ட ராம்குமார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். சம்பவத்தன்று, வாயை வெட்ட முயற்சி செய்தபோது, அது கொலையில் முடிந்துள்ளது. இவ்வாறு ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். அதேநேரம், இருவருக்குமான பேஸ்புக் சாட்டிங் பற்றிய தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.