எங்களை துரத்தி வந்து போட்டோ எடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யனும்.. ராம்குமார் தங்கை
நெல்லை: சுவாதி கொலை வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், ஊடகங்கள் தங்களை வீடியோ, போட்டோ எடுத்தது ஏன் என்று கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தங்கை, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அப்போது, ராம்குமாரின் தாய் மற்றும் சகோதரியை, போலீசார் நெல்லை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
போட்டோ முயற்சி
நெல்லை மருத்துவமனையில், ராம்குமார் உடல் நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக வெளியே காத்திருந்த அவர்களை சில நாளிதழ்கள் மற்றும் டிவி சேனல்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க முற்பட்டன. இதை பார்த்து அவர்கள் முகங்களை ஆடையால் மறைத்துக் கொண்டனர்.
குற்றவாளியா?
ஒரு வழக்கில் ஒரு நபரை போலீசார் கைது செய்த உடனேயே அவர் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. கோர்ட் தீர விசாரணை நடத்தி, குற்றவாளி என்று ஒருவரை அறிவித்த பிறகுதான் அவர் குற்றவாளி என அழைக்கப்படுவார். ஆனால், ராம்குமாரை கைது செய்த உடனேயே அவரது குடும்பத்து பெண்களை போட்டோ எடுக்க முற்பட்டது சமூக வெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யாவுக்கு ஒரு நியாயமா
ஆடி காரை வைத்து தொழிலாளியை மோதி கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் போட்டோவை ஏன் ஊடகங்கள் வெளியிடவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. ஐஸ்வர்யா குடும்ப போட்டோவை வெளியிடாததை போன்றே ராம்குமார் குடும்ப போட்டோவையும் வெளியிடாமல் இருப்பதுதான் ஊடக அறம் என்று மூத்த பத்திரிகையாளர்கள் இளம் மீடியா நிருபர்களுக்கு அறிவுறுத்திவருகிறார்கள்.
படிக்க சொல்லும் பாசக்காரர்
இந்நிலையில், ராம்குமார் சகோதரி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
என் அண்ணன் எங்களை எப்போதும் பாடத்தை, படி படி என்றுதான் சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருப்பார். எங்களை ஐஏஎஸ் ஆக்கணும் என்று ஆசைப்பாட்டார்.
நாடகம் நடக்கிறது
எங்கள் அண்ணனும் எப்போதும், புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டிருப்பார். ராம்குமார் ஒரு கொலை செய்திருப்பார் என்று நம்பமுடியவில்லை. கொலையை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது.
துரத்தி எடுத்தனர்
நாங்கள் வழக்கறிஞராக யாரை நியமிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உள்ளூர் வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். ராம்குமார் கைது செய்யப்பட்ட போது மருத்துவமனையில் வைத்து எங்களை பெண் என்று கூட பார்க்காமல் துரத்தி துரத்தி வீடியோ எடுத்தனர்.
வழக்கு பதிவு தேவை
ராம்குமார் குற்றவாளி என்று முடிவு செய்வதற்கு முன் எப்படி எங்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கமுடியும்? எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். புகைப்படங்கள் எடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தே ஆகவேண்டும் இல்லை என்றால் நாங்கள் அவர்கள் மீது வேறு நடவடிக்கை எடுக்க முடிவு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.