சினிமாவாகும் வேலுநாச்சியார் வரலாறு... கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் வைகோ
வைகோ முதல் முறையாக சினிமா தயாரிக்கப்போகிறார். கண்ணகி ஃபிலிம்ஸ் மூலம் வேலு நாச்சியார் படம் தயாரிக்கிறார்
சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலமாக பணி செய்து வரும் அரசியல் கட்சித் தலைவர்களில் சினிமா தொடர்பில்லாமல் இருப்பவர் வைகோ. கண்ணகி ஃபிலிம்ஸ் மூலம் முதல் முறையாக சினிமா தயாரிக்கப்போகிறார் வைகோ.
நேற்று அக்டோபர் 9ஆம் தேதி நாரத கான சபாவில் வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடத்திக் காட்டினார்கள்.
வைகோவின் வடிவமைப்பில் வசனமெழுதி திரைப்படத்தை தயாரிக்க போகும் வீரத்தாய் வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றின் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
இந்த நாடகத்திற்கு வைகோவின் அழைப்பின் பேரில் நடிகர் சங்க தலைவர் நாசர் , தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழருவிமணியன், ஓய்வு பெற்ற நீதியரசர் அரி பரந்தாமன், கவிஞர் காசி ஆனந்தன், அபிராமி ராமநாதன், பெ. மணியரசன், மூத்த டைரக்டர் எஸ்.வி. முத்துராமன் , விஜிபி சந்தோஷம், நடிகர்கள் விஜயகுமார், பார்த்திபன், விவேக், தம்பி ராமையா, நடிகை கஸ்தூரி மற்றும் தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் மற்றும் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளும், இயக்குநர்களும் , தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

சினிமா தயாரிக்கும் வைகோ
நாடகம் முடிவடைந்ததும் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வேலு நாச்சியாரின் புத்தகத்தை வெளியிட்ட வைகோ, இந்த பொக்கிஷத்தை திரைப்படமாக எடுத்து தமிழக மக்களுக்கும், உலகத்துக்கும் கொடுக்கவேண்டும் என்றும், அந்தப் பொறுப்பை நானே ஏற்று கண்ணகி ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிக்கிறேன் என்றும் கூறினார்.

வைகோவிற்கு நன்றி சொன்ன விஷால்
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசும் போது வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக பார்த்து திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கான உரிமைகளை பெறுவதற்கு உத்வேகம் வந்ததாகவும் இந்த நாடகத்தை பார்க்க எங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தலைவர் வைகோவிற்கு நன்றி என கூறினார்.

பெண்களின் வீரம்
நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும் போது இந்த நாடகத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். சுதந்திர போராட்ட வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழக பெண்கள் உரிமைக்காக வீரத்தோடு போராடிய வரலாற்றை நாடகமாக தந்த உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் . இதற்காக எவ்வளவு உழைப்பை தந்திருப்பீர்கள் என நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது.

நடிகர் விஜயகுமார் பேச்சு
வீரத்தாய் வேலுநாச்சியார் திரைப்படம் உருவாக நடிகர் சங்கம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
நடிகர் விஜயகுமார் பேசும் போது வீரப்பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை பார்த்து நடிக்க வந்தவன்.எனவே இந்த வேலுநாச்சியார் திரைப்படம் வெற்றி பெறும்.

பார்த்தீபன் வாழ்த்து
நடிகர் பார்த்திபன் பேசும் போது வேலு நாச்சியார் திரைப்படம் உருவாக என்னுடைய பங்கும் கண்டிப்பாக இருக்கும் என கூறினார் .

சினிமா துறை பாதிப்பு
நாடகம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ
ஜி.எஸ்.டி வரியால் தமிழக சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள 28 சதவீத வரியோடு தமிழக அரசின் கூடுதலான 10 சதவீத கேளிக்கை வரி தமிழ் சினிமாவை நசுக்கும், எனவே தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.











Click it and Unblock the Notifications