பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த தாம்பரம் பாதிரியாருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை: பிளஸ் 1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான பாதிரியார் டேவிட் இன்பராஜுக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் அலமேலுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட் இன்பராஜ்(35). அவர் தாம்பரம்-முடிச்சூர் சாலை பட்டேல் தெருவில் இருக்கும் தேவாலயத்தில் பாதிரியராக இருந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி தாம்பரம் காவல் நிலைய எஸ்.ஐ. மகளான பிளஸ் 1 மாணவி ராணியுடன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாயமானார்.
மகளை காணவில்லை என எஸ்.ஐ.யும், கணவரை காணவில்லை என்று பாதிரியாரின் மனைவி சோனியாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சோனியா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ஒசூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த பாதிரியார் மற்றும் மாணவியை பிடித்தனர். பாதிரியார் மீது மைனர் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மாணவியை கடத்திய பாதிரியார் அவரை முதலில் விசாகப்பட்டினம் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு ஒடிசா. மேற்கு வங்கம், நாகலாந்திற்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எல்லாம் கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டு மாணவியுடன் பாதிரியார் இருந்துள்ளார்.
இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிரியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications