வருமான வரி அதிகாரியிடம் நகையைக் கேட்டு பெண்கள் தகராறு...விவேக் மாமனார் வீட்டு முன் அரங்கேறிய கூத்து!
சென்னை அண்ணாநகரில் உள்ள விவேக் மாமனார் வீட்டு முன் திரண்ட பெண்கள் தங்களது நகைகளை திருப்பி அளிக்குமாறு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : சென்னை அண்ணாநகரில் வருமான வரி சோதனைக்கு ஆளாகியுள்ள விவேக்கின் மாமனார் வீட்டின் முன் பெண்கள் திரண்டு வந்து தங்களது நகைகளை திருப்பி அளிக்குமாறு அதிகாரிகளுடன் வாக்குவாரத்தில் ஈடுபட்டனர்.
க்ளீன் பிளாக் மணி ஆபரேஷன் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் சசிகலாவின் அங்காளி பங்காளிகளின் வீட்டில் ஒரு துண்டு சீட்டை கூட விட்டுவிடாமல் கணக்கெடுத்து வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகத்தில் தொடங்கிய விசாரணை இன்னும் நீடிக்கும் நிலையில், அதன் செயல் தலைவர் விவேக்கின் சென்னை மகாலிங்கபுரம் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது.
இதே போன்று சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருமான வரி சோதனை தகவல் அறிந்து அந்த வீட்டின் முன்பு 4 பெண்கள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு வாசலில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகையைக் கேட்டு வம்பு
இதனையடுத்து சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரி வெளியே வந்து என்ன விஷயம் என்று அந்தப் பெண்களிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ரா என்ற பெண் தான் பாஸ்கர் மனைவி ஜெயாவின் தங்கை என்றும் தங்களின் நகைகள் இந்த வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
மழையால் பாதுகாப்பிற்காக
சித்ரா கொளத்தூர் பகுதியில் வசிப்பதால் மழை, வெள்ள பாதிப்பு இருந்ததால் பாதுகாப்பிற்காக தன்னுடைய நகையை எடுத்து வந்து ஜெயா வீட்டில் தங்கி இருந்ததாகக் கூறியுள்ளார். தற்போது ரெய்டு நடப்பதால் தன்னுடைய நகையை திருப்பி எடுத்துக் கொண்டு செல்லவே வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரசீது இருக்கிறது
ஆனால் சித்ரா கூறியதை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் அசராத அந்தப் பெண் நகைகளுக்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும் அதனை எடுத்து வந்து காண்பிப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து உரிய ரசீதுகளை கொண்டு வந்தால் நகையைத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ரசீதுடன் வருவேன்
அதிகாரி உறுதியளித்ததையடுத்து தான் ரசீதை எடுத்து வருவதாகக் கூறி அந்தப் பெண் அந்த இடத்தில் இருந்து கிளம்பியுள்ளார். வருமான வரி சோதனைக்கு மத்தியில் நடந்த இந்த கூத்தை அந்தப் பகுதியினர் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சென்றனர்.