வண்டலூரிலிருந்து எந்த புலியும் வெளியேறவில்லை, அனைத்து புலிகளும் பத்திரம்: அமைச்சர் ஆனந்தன்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து எந்த புலியும் வெளியேறவில்லை. மாயமானதாக கூறப்பட்ட புலி பாதுகாப்பாக, பத்திரமாக உள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
புலிகள் பாதுகாப்பாக உள்ளது, சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளதாகவும், புலி சிக்கியதும் மயக்க ஊசி அளித்து புலி மீண்டும் கூண்டில் அடைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. யானை, சிங்கம், புலி உட்பட ஏராளமான விலங்குகள், பறவைகள், பாம்புகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.
புலிகள் வாழும் பகுதி 6 ஏக்கரில் பள்ளத்தாக்கு போல அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி அகழியும் அதைச் சுற்றி 8 அடி உயரத்துக்கு கருங்கல் மதில் சுவரும் கட்டப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புலிகள் வாழ்விடப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சுமார் 85 அடி நீளத்துக்கு சேதமாகி விழுந்துவிட்டது. சுவர் விழுந்த சந்தர்ப்பத்தில், இதில் ஏற்பட்ட இடைவெளி வழியாக 5 புலிகள் வெளியேறிவிட்டதாக செய்தி பரவியது.
மேலும், வெளியேறிய 5 புலிகளில் 3 புலிகளை பூங்கா ஊழியர்கள் பிடித்து கூண்டில் அடைத்துவிட்டதாகவும், இரண்டு புலிகள் இன்னும் பிடிபடவில்லை என்றும் செய்தி பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
தொடர்ந்து சனிக்கிழமையன்று நேத்ரா என்ற வங்கத்து பெண் புலி மட்டும் மாயமாகிவிட்டதாக தகவல் பரவியது. எனவே அது காட்டுப் பகுதியில் வெளியேறிவிட்டதாகவும், அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் எந்த நேரத்திலும் நுழையலாம் என்றும் பெருங்களத்தூர், நெடுங்குன்றம், ஓட்டேரி, ஊனமாஞ்சேரி பகுதி மக்கள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால் கடந்த மூன்று நாட்களாக பதற்றம் நிலவியது. புலியை கண்டுபிடிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டனர்.
இதையடுத்து பூங்கா ஊழியர்கள் மதில்சுவர் விழுந்த இடத்தில் அவசரம் அவசரமாக வலை, இரும்பு வேலிகள் அமைத்தனர். இந்த நிலையில், புலி ஏதும் தப்பிச் செல்லவில்லை. புலி தப்பியதாக வெளியான செய்தி தவறானது என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் மக்களின் அச்சம் விலகவில்லை.
இந்நிலையில், இன்று மாநில வனத்துறை அமைச்சர் அனந்தன் வண்டலூர் பூங்காவுக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாயமானதாகக் கூறப்படும் புலி, வண்டலூர் பூங்காவுக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில்தான் உள்ளது. அதன் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என்றார்.
புலி கூண்டுக்குள் வராமல் புதர் பகுதியிலேயே சுற்றித் திரிகிறது. புலி சிக்கியதும் மயக்க ஊசி அளித்து மீண்டும் கூண்டிற்குள் அடைக்கப்படும்" என அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார்.
வண்டலூர் பூங்கா வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில்தான் புலி உள்ளது என்று அமைச்சர் உறுதி செய்துள்ளதால் மக்களிடையே நிலவி வந்த அச்சம் சற்று அகன்றுள்ளது.