மலேசியாவில் இருந்து வந்து திருச்சி ஏர்போர்ட்டில் முடங்கிக் கிடக்கும் நிவாரணப் பொருட்கள்
திருச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியாவில் இருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் திருச்சி விமான நிலையத்தில் முடங்கிக் கிடக்கிறது.
கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் பலர் உடைமைகளையும், வேலையையும் இழந்து வாடி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். மலேசியாவில் உள்ள பியூப்பிள் பவுன்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிஸ்கட், பால் பவுடர், சானிடரி நாப்கின் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
அந்த பொருட்களை மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து கடந்த 25ம் தேதி திருச்சியை அடைந்தது. நிவாரணப் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி சுங்கத் துறை அதிகாரிகள் அவற்றை விமான நிலைய்ததிலேயே முடக்கி வைத்துள்ளனர்.
பொருட்களை எடுத்துச் செல்ல மாவட்ட கலெக்டர் அல்லது பொருட்கள் எங்கு வினியோகிக்கப்பட உள்ளதோ அந்த மாவட்ட கலெக்டரிடம் இவை நிவாரணப் பொருட்கள் தான் என்று உரிய ஆவணம் வாங்கி வருமாறு சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொருட்களை மலேசியாவில் இருந்து கொண்டு வந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications